Friday, 30 May 2025

"ஊர் திரும்புதல்" - (எழுத்தாளர்கள் ஸ்ரீரஞ்சினி மற்றும் சிவகாமி) - சிறுகதை தொகுப்பு வாசிப்பு அனுபவப் பகிர்வு..!


"ஊர் திரும்புதல்" தொகுப்பிலிருக்கும் ஏழு கதைகளில் நான்கு ஸ்ரீரஞ்சியினதும், மீதமுள்ள மூன்று ரஞ்சியின் மகள் சிவாகாமியினதுமாக இருக்கின்றது. தாயும் மகளும் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் இருவரது கதைகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன என்ற போதும், தனித்தனியாக எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய என் கருத்துக்களைப் பகிர நினைக்கிறேன். அந்தவகையில்,  சிவகாமியின் "ஊர் திரும்பல், கார்திகைப் பெண்கள், மற்றும் மீளிணைவு என்கின்ற சிறுகதைகளோடு ஆரம்பிக்கையில், ஒரு சிறுகதை என்னவெல்லாம் செய்யும் அல்லது செய்யவேண்டும் என்று நான் சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பதுண்டு. என்னுடைய சிறுகதைகள் ஒரு பொழுதில் ஸ்தம்பித்து நிற்கும் போது அல்லது முடிவென்று நான் நினைப்பது முடிவில்லாமல் போகும் போது என் மனதில் எழும் கேள்வி இந்தக் கதையை வாசிக்கும் இன்னொருவர் இதனை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வார் என்பதாக இருக்கும். சிவகாமி சிறுமியாக கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்த எழுத்தாளர். அவர் தனது பார்வையில், அனுபவத்தில் எழுதிய இந்த மூன்று கதைகளும் எனக்குள் மூன்றுவிதமான சிறு வெளிகளைத் தோற்றுவித்தன என்றுதான் சொல்லவேண்டும். அவை தோற்றுவித்த வெளிகள் ஏற்கனவே என் மனதில் இருந்த எண்ணங்களோடும், நினைவுகளோடும் பலமாகப் பொருந்திப் போனபோது சிவகாமி மிகச்சிறப்பாகவே தனது உணர்வுகளை வாசிப்பவர்களுக்குள் கடத்திவிடுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

"ஊர் திரும்பல்" சிறுகதையில், தனது தாயின் சாம்பலை ஊரில் கரைக்கச் செல்லும் மகளை உருவகிக்கும் சிவகாமி ஊரில் நிகழ்ந்த மாற்றங்களையும், நாடு விட்டு நாடு பெயர்ந்த எங்களது மனங்களில் எப்போதும் இருக்கும் "எது எங்களது நாடு/இருப்பிடம்" என்ற கேள்வியையும் தொட்டுச் செல்கிறார். நான் எனது பத்தொன்பதாவது வயதில்தான் நாடு பெயர்ந்து கனடா வந்து சேர்ந்தேன். பத்தொன்பது வயதுக்குள்ளாகவே ஆறு நகரங்களையும், ஏழு பாடசாலைகளையும் மாற்றி மாற்றி வாழ்ந்த எனக்கு, சிவகாமியின் எது எனது இருப்பிடம் என்ற கேள்வியும், எவை என்னுடன் வரப்போகின்றன என்ற குழப்பமும், எந்தெந்த நினைவுகளை நான் நினைவில் வைத்திருப்பது என்ற பதற்றமும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் பதினேழு வருடங்களின் பின்னர் கடந்த வருடம் நாடு திரும்பியிருந்தேன். இதில் என்ன காட்சிப்பிழை என்றால், நாட்டில் இருந்த பத்தொன்பது வருடங்களில் நான் பிறந்த வீட்டைப் பார்க்கும் வாய்ப்போ, அல்லது அம்மாவின் பிறந்த ஊரைப் பார்க்கும் சந்தர்ப்பமோ எனக்கு கிடைக்கவே இல்லை. அம்மாவின் ஊரை, நான் பிறந்து இரண்டு வயது வரை வாழ்ந்த எங்களது வீட்டை, எனது முப்பதுகளின் இறுதியில் தான் போய்ப் பார்க்க முடிந்தது என்பது எவ்வளவு முரண்நகை. "எனது தமிழ் எவருடையுது போலவும் இருக்கவில்லை' என்று சிவகாமி கலக்கமுறும் இடத்தில், சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு போயிருந்த எனக்குத் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் கதைக்க கொஞ்ச நாட்கள் எடுத்ததும், என்னுடன் படித்த எனது தோழி தனது குழந்தைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கிறாள் என்பதுவும் அவளது இரு குழந்தைகளும் வீட்டில் சரளமாக ஆங்கிலத்தில் மட்டுந்தான் பேசுகிறார்கள் என்பதுவும் நினைவுக்கு வந்தது. வீடு திரும்பும் நாங்கள் ஒவ்வொருத்தரும் எதனை எதிர்பார்க்கிறோம்? என்னைக் கேட்டீர்கள் என்றால் நான் எனது ஆறு வயதுவரை யாழில் வாழ்ந்திருந்தேன். எனது நினைவுகள் அதிலேயே தான் நின்று சுற்றுகிறது என்பதை நான் கொஞ்சம் வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது, நான் எனது ஆறாவது வயதில் எப்படி யாழ்ப்பாணம் என் நினைவில் இருந்ததோ, அப்படியானதொரு சூழலை எதிர்பார்க்கிறேன் என்று தான் நினைக்கிறேன். புலம்பெயர்ந்த நாங்கள் அங்கிருக்கும், புலம்பெயராத மனிதர்களை, எல்லா இழப்புக்களையும், துன்பங்களையும், அடடூழியங்களையும் தாங்கி வாழ்ந்த மனிதர்களை மாறாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா? எனக்குத் தெரியவில்லை. அங்கு இருப்பவர்கள் எல்லோரும் இங்கு வந்துவிட்டால் இவ்வளவு செலவழித்து கட்டின வீடடை என்ன செய்வது என்ற சிவகாமியின் கேள்வி எனக்குள்ளும் நிறைந்திருக்கிறது. சிவகாமியாவது எப்போதாவது போய்த் தங்கக்கூடிய வீடு குறித்துக் கவலை கொண்டார். ஆளில்லாத ஊர்களில் எல்லாம் கோடிகளில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்  கோவில்கள் குறித்தும், மணிமண்டபங்கள் குறித்தும் கவலை கொண்டேன். ஆனால் நான் வந்துவிட்டேன், அதனால் இங்கு வர நினைப்பவர்களை வராதீர்கள் என்று சொல்லவும் தகுதி இழந்தவள் ஆகிறேன் என்றவகையில் சிவகாமியின் குழப்பங்கள் தான் எனக்குள்ளும். பதில் தான் இல்லை.  புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையை சேர்ந்த ரஞ்சி  மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த சிவகாமி ஆகியோரது நினைவுகளில் உறைந்துபோன ஊரானது இப்போது இல்லை என்பதுதான் உண்மை. ஊர் திரும்பும் நாங்கள் தேடுவது இப்போது அங்கு இல்லை. இந்த யாதும் செய்யமுடியாத கையறு நிலையில் நிற்கும் நிலையை இந்த சிறுகதை மிகச் சிறப்பாகப் பேசுகிறது.

"ஊர் திரும்புதல்" கதையில் எழும் மனக்குழப்பங்களுக்குப் பதிலை தனது "கார்த்திகைப் பெண்கள்" கதையில் முன்வைக்கிறார் சிவகாமி என்று நான் நினைத்துக் கொண்டேன். எப்படியென்றால், ஒன்பது வயதில் குடிபெயர்ந்த பெண் குழந்தைக்குத் தனது அடையாளங்களை தெளிவாகப் பிரித்துப் பார்க்கவும், அவைக்கு உரிய மரியாதைகளை செய்யவும் முடிகிறது. ஏனெனில், இரு உலகங்களையும் அந்தந்த இடத்து மொழியுடன் நினைவுகளாக்கிக் கொள்ளும் போது பெரிதாக குழப்பங்கள் நேர்ந்துவிடாது. ஒரு வயதில் வந்த குழந்தைக்கு, கனடா நாடுதான் அவளது உலகமாக இருக்கும். எந்தக் குழப்பங்களும், நினைவுகளும் ஊர் குறித்து அவளுக்கு இருக்கப் போவது இல்லை. ஆனால், ஐந்து வயதில் குடிபெயர்ந்த குழந்தை எப்படி முற்றிலும், அதாவது கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மொழி என்று எல்லாவிதத்திலும் வேறுபட்ட இரு வேறு உலகங்களுடன் பொருந்திப் போக முடியும். இரெண்டு உலகங்களும் உருவாக்கித் தந்த, தரப்போகும் நினைவுகளை எப்படிப் பிரித்தறிய அந்தச் சிறுமியால் முடியக்கூடும்? இவ்வாறான உளப் போராட்டங்களுக்குள் சிக்கிக்கொண்ட குழந்தைகள் எவ்வாறு தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பது மிகச் சவாலான ஒரு விடயம்தான். சகோதரிகளுக்கு இடையில் நிகழும் உரையாடலில் உளச்சிக்கலை தெளிவாகப் பேசுகிறார் சிவகாமி. புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் இருக்கும் பதட்டம் என்று நான் நினைப்பதென்றால், பிள்ளைகளை "ஒழுங்காக" வளர்க்க வேண்டும். இந்த "ஒழுங்காக" என்ற சொல்லுக்குள் எத்தனையோ சொற்கள் அடங்கிவிடும். அவர்கள் ஒழுங்காகப் படிக்கவேண்டும், ஒழுங்காக கலாச்சாரத்தைப் பேணவேண்டும். நாங்கள் சாதி பார்க்கிறதில்லை என்று சொல்லிக்கொண்டு ஆனால் அந்த சாதிக்குள், மதத்துக்குள் மட்டுமே திருமணம் செய்யவேண்டும். அப்படி இப்படி என்று இந்த "ஒழுங்காக" என்ற சொல்லுக்குள் எத்தனையோ சொற்கள். மீண்டும் ஊரில் தங்கிப் படிக்கப் போகும் அக்காவிற்குப் பதில் சொல்லும், ஒரு வயதில் கனடாவிற்கு வந்த குழந்தை, "இங்கையிருக்கிற தமிழாக்கள் மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைத் தூக்கிப் பிடிக்கிறதில்லை" என்று சொல்கிறாள். எனக்கு அந்தக் கூற்றில் எவ்வ்ளவு உடன்பாடு இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை ஆனால், வாய்ச்சொல்லில் வீரர்களாக புலம்பெயர்ந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதையும், ஆனால் ஊரில் மாற்றங்களை கொஞ்சம் இலகுவாக ஏற்றுக் கொள்கிறார்கள் போலத்தோன்றுவதையும் இங்கு நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

சிவகாமியின் மூன்று சிறுகதைகளிலும் எனக்குள் வெகுவான தாக்கத்தை ஏற்ப்படுத்திய சிறுகதை "மீளிணைவு." கடந்த வருடம் நான் யாழ்ப்பாணத்தில் நின்ற இரு மாதங்களில் நான் பயணித்த அத்தனை ஊர்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் அமைந்திருந்தன. எல்லா ஊர்களிலும் குறைந்தது இரண்டு கோவில்களிலாவது திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்தன. அதன் பொருட்டு ஊர் மக்கள், அல்லது அந்தத் தெருக்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு விரதங்களையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். இது குறித்துப் பேச்சு வாக்கில் எங்களுடன் பயணித்த சாரதியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பிறந்தது முதல் தன் ஊரைவிட்டு வெளியேறி அறிந்திராத அவர் வெகு இயல்பாக, "எத்தனை அவலச்சாவுகள் பிள்ளை. அத்தனை ஆவிகளையும் எப்படி கட்டுக்குள்ள வைச்சிருக்கிறது. இத்தனை கோவில்கள் இருக்கிறதால தானே" என்றார். அந்தக் கூற்றில் இருக்கும் உண்மையின் தார்ப்பரியத்தை நான் அறியேன். ஆயினும், சிவகாமி சொல்லிய பேய்கள் எத்தனை எத்தனையோ. சிவகாமி போலவே தனது குழந்தைப் பருவத்தில் வெளியேறி இருபத்தைந்து வருடங்களின் பின் நாடு திரும்பிய எனது கணவரின் வீடு  இப்போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த வீடு இருக்கும் பகுதியை இராணுவம் முழுக்க முள்ளுக் கம்பிகளால் வேலி கட்டிப் பாதுகாத்து வருகிறது. அந்தப் பகுதிகளைக் காட்டிய எனது கணவர் சொன்னதெல்லாம் எங்கெல்லாம் சடலங்களும், காயப்பட்ட உடலங்களும் எறிபட்டுக் கிடக்கும் என்பதுதான். சிவகாமியின் மீளிணைவு என்னை இந்த நினைவுகளுக்குள் தூக்கி எறிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். என்னால் அந்த சுழலுக்குள் இருந்து மீள இலகுவாக முடியவில்லை. ஊரிலிருந்து வெளியேறி அறியாத, சாதாரணமான தனது அறுபதுகளில் இருக்கும் ஒரு மனிதனும், தனது குழந்தைப் பருவத்தில் நாடு விட்டு வெளியேறிய சிவகாமியும் அவலச்சாவடைந்த உயிர்களை இரு வேறுவிதமாக ஆனால் ஒன்றாக உருவகித்ததை இந்தச் சிறுகதையின் வெற்றியாக நான் பார்க்கிறேன். செத்த மனிதர்களெல்லாம் இந்துக்களாகத்தான் இருப்பார்கள் எனது சாரதி நினைத்துக் கொண்டாரா, இல்லை, இந்துக் கோவில்களுக்குள் குடியிருக்கும் கடவுள்கள் எல்லாப் பேய்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி வாய்ந்தவையா என்று நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. "மீளிணைவு" சிறுகதை என்னை நினைக்கவைத்தது. அதுமட்டுமில்லாமல், "வீடு திரும்புதல்" சிறுகதைத் தொகுப்பில் கூடுதலாக இந்து மதச்சடங்குகளை அதிகம் குறிப்பிட்டதாலும் இருக்கலாம். சிவகாமியின் கதைகள் மிக சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் ரஞ்சிக்கு மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எங்களது கதைகளை வேறு மொழிகளில் முக்கியமாக சர்வதேச மொழியாகிவிட்ட ஆங்கிலத்தில் சொல்லவேண்டியது காலத்தின், வரலாற்றின் தேவை. அந்தவகையில் நான் சிவகாமியைக் கேட்டுக் கொள்ளவேண்டுவதெல்லாம் தொடர்ந்து எங்களது கதைகளை, சொல்லப்படாத நினைவுகளை, உணர்வுகளை, வரலாறுகளை, குரலற்றவர்களின் பாடல்களைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதுவே. அந்த வேண்டுகோளை அவர்முன் வைத்துக் கொண்டு, இனி ரஞ்சியின் கதைகளுக்குள் நுழையலாம் என்று நினைக்கிறேன். 

"பேசலின்றிக் கிளி ஒன்று" என்ற கதையில் ரஞ்சி போரில் காயப்பட்டு உடற்பாகங்களை இழந்த பெண் குழந்தை கனடா வந்ததால் எப்படி  "அதிர்ஷ்டத்தை" கொண்ட குழந்தையாகினால் என்று சொல்கிறது. தாயே தன்னைக் கேடயமாக்கிக் காப்பாற்றியதால் மட்டுமே உயிர் பிழைத்து, குடும்பம் இழந்து, உறவினர்களைப் பெற்றோர் ஆகக் கொண்ட குழந்தைகள் எத்தனை எத்தனை. இறுதிப் போரில் தாய் இறந்ததையே அறியாமல் பால் குடித்த மழழையைப் பார்த்தோம். அந்தக் குழந்தை இப்போது எப்படி உணர்ந்து கொள்ளும்? எதுதான் அதிஷ்டம்? இப்படி இழந்தாலும் புலம்பெயர்ந்தபடியால் வாழமுடிகிறது. இதே ஊரில் என்றால் சாதாரண வாழ்க்கை என்பது கடினம். அதனால் அதிஸ்டமா? ரஞ்சி கேட்காமல் கேட்ட அதே கேள்வியுடனே கதையைக் கடந்தேன். "இழை ஒன்று அறுந்து போகின்றதா" என்ற கதையில் உறவுகளுக்குள் இருக்கும்/இழையோடும், தோன்றும் உணர்வுச் சிக்கல்களை பேசுகிறார் ரஞ்சி. எங்கள் குடும்ப அமைப்பென்ற வழக்கத்தில் இருக்கும் பெரிய நடைமுறைச் சிக்கலே நாம் குடும்ப அங்கத்தவர்களை தனி மனிதர்களாகப் பார்ப்பதில்லை. "அம்மா" என்றால் அம்மாதான். அவள் கடவுள், தேவதை. தப்பு என்று இந்த சமூகம் சொல்லும் எதையும் அவள் செய்ய மாட்டாள் அல்லது செய்யக்கூடாது. அப்பா என்றால் அவர் அப்பாவாக மட்டும் தான் இருக்கவேண்டும். இவர்கள் யாரேனும் துணை இன்றி  அமைந்தால், மீண்டும் துணை தேடக்கூடாது, அல்லது முடியாது. இந்த எண்ணங்களை இந்த யுகத்திலும் குழந்தைகள் எவ்வாறு தங்கள் மனங்களில் உருவேற்றிக் கொள்கிறார்கள். இந்தக் குழப்பமான கருக்களை ஏன் நாங்கள் இன்னமும் பேசுகிறோம் இல்லை? அம்மாவை தனி மனுஷியாக, உணர்வுள்ள ஒரு பெண்ணாக, தகப்பனையும் அப்படியே பார்க்க எங்கள் சந்ததிகளுக்கு நாங்கள் சொல்லித் தரத்தான் வேண்டும். ஆனால், தங்களது பிள்ளைகள் யாராவது நண்பர்களை அழைத்து வந்தால், "பிள்ளை நீங்கள் ஊரில் எவ்விடம்" என்று கேட்டு அவர்களது சாதியைத் தெரிந்து கொள்ள முயலும் தலைமுறை இருக்கும் வரை இது கடினம் தான் என்பதும் நிதர்சனமே. "முகிலிருட்டில்" என்ற சிறுகதையும் இவ்வாறான சமூகப் பிரச்சினை குறித்தே பேசிச்  செல்கிறது. 

"நிழலில் நிஜம் தேடி" என்ற சிறுகதையில் ஊர் திரும்புதல் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சி. ஊரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அல்லது அந்தப் பெயரில் அப்போதே இறந்து போனவர்கள் குறித்து நான் வருந்தியிருக்கிறேன். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்  அல்லது எங்கோ உயிரோடு இருக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள அவர்களது பெற்றோர்களோ, சகோதர்களோ, மனைவி குழந்தைகளோ இருந்தார்கள்/இருக்கிறார்கள். வாய்க்கும் வயிறுக்கும் பெரும்பாடு பட்டு உழைத்து, குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் மனைவிகள் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அல்லது மற்றக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டு காணாமல் போன அந்த மகவை நினைத்து அழுது அழுது களைக்காத தாய்மார், பெற்றோர் இருந்தார்கள்/இருக்கிறார்கள். நான் அவர்களைக் குறித்து வருந்தியதோடு நிறுத்திக்கொண்டேன். காணாமல் போனவர் என்ற பெயரோடு அந்த நொடி போயாகிற்று. ஆனால் வெளியில் அவர்களது நினைவுகளோடு வாழ நிர்ப்பந்திக்கப்படட மக்களது நிலைமை பற்றி இந்தக்  கதையும், சிவகாமியின் "மீளிணைவு" கதையும் பேசுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை விடயங்களை, நினைவுகளை, மனித உடல், உளம் சார்ந்த தேவைகளை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று உணரும் பொழுதில் இது எவ்வளவு  பாரதூரமான,சமூங்கத்தின் அடிவேர் வரை ஊடுருவி மனிதர்களை அவர்களது வாழ்வியலை சிதைக்கும் போர்க் குற்றம் என்று தோன்றியது. ஆக, ஸ்ரீரஞ்சி மற்றும் சிவகாமியின், "ஊர் திரும்புதல்" சிறுகதைத் தொகுப்பு மனத்தைத் தொடும் ஒரு படைப்பாக அமைந்திருக்கிறது. 


Tuesday, 6 July 2021

சந்தோசம் (- நன்றி காலம் இதழ் )

அவள் அவனை காரில் ஏற்றிக் கொள்வதற்குப் போன போது வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. லேசான இளவேனில் மழை. அவன் வீட்டு வாசல்படிகள் தொடங்கும் இடத்தில் குந்தியிருந்தான். கைகளின் ஒரு பொலித்தீன் பையுக்குள் ஒன்றிரண்டு உடுப்புகளும் போத்தில்களும் இருந்தன. மறு கையில் போன் இருந்தது. இவளது கார் டிரைவ் வேயில் வந்தும் அவன் எழும்பி வரவில்லை. இன்னொருவர் வந்து அவனுக்கு உபெர் (Uber) வந்துவிட்டதாய் சொன்ன பின் அவன் காரை நோக்கி வந்தான். 

"நீங்கள் தான் கிறிஸ் பார்க்கர்?" அவள் வழமை போல கேட்டாள்.

"இல்லை, நான் ஜெரோனி"

"ஓ" 

அவன் பின் கார் கதவைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் திரும்பி அவனிடம் பேச முயன்ற போது மற்றவன் இவளின் பக்கமாக வந்தான். 

"நான் கிறிஸ், இவர் என் நண்பன் ஜெரோனி. இவருக்காக நான் தான் உபேர் அழைத்தேன். நான் வரவில்லை"

"சரி, அப்படியானால் நான் விடைபெறுகிறேன்" இவள் பொதுப் படையாக சொல்லி விட்டு திரும்பி ஜெரோனியைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெரோனி நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம் என்று தோன்றியது. நல்ல உயரமாக உடற்கட்டுடன் இருந்தான். பேச விருப்பப்படுபவனாக தெரியவில்லை. அவன் காரில் ஏறும்போது அவனுடன் ஏறிய சிகரெட்டும் மழையும் கலந்த மணம் இவளுக்கு ஒத்துவருமாய் போல் இல்லை. அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். இவளுடைய போனில் இன்னும் போக இருக்கும் தூரம் அறுபத்தாறு கிலோமீற்றர்களாக இருந்தது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இந்த மனிதனுடன் பயணிக்கவேண்டும். இவளுக்கு யோசனையாக இருந்தது. இந்த உபேர் அழைப்பை அவள் ஏற்றுக் கொள்ளும்போது அவளுக்குத் தோன்றியதெல்லாம் ஓன்று தான், இதை முடித்தால் இன்றைய நாளின் இலக்காக நூறு டொலர்கள் வந்துவிடும். நேரத்துடன் வீட்டுக்குப் போகலாம், போகும் போது மகனுக்கு மக் டொனல்ட்ஸ் சிக்கின் நக்கெட்ஸ் வாங்கிப் போனால் இரவு சாப்பாடு பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பது மட்டும் தான். இப்போது இந்த மனிதனுடன் தூறும் மழையில் ஒரு மணித்தியாலம் பயணம் என்னும் போது அவளுக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. இறக்கி விட்டுப் போனாலும் கஸ்டமர் சர்வீஸில் முறைப்பாடு செய்துவிடுவார்கள். அது வேறு சிரமமாக இருக்கும். வருவது வரட்டும் என்று தோன்றியது அவளுக்கு. காரை மித வேகத்தில் ஒட்டி நெடுஞ்சாலையில் ஏற்றினாள். 

 நெடுஞ்சாலை அவ்வளவு இறுக்கமாக இல்லை. கோரோனாவின் விதிகள் மக்களை கட்டிப்போட்டிருந்தன. இவள் சற்று வேகமாகவே ஒட்டிக் கொண்டிருந்தாள். 

"உங்களுக்கு ரேடியோ வைக்கட்டுமா? எந்த சேனல்?"

"தேவையில்லை, நான் கேட்பதில்லை."

"ஓகே."

அந்தக் காரின் அளவு சிறுத்துக் கொண்டு வருவது போல இருந்தது. மழைத் துளிகள் விழும் சத்தமும், வைப்பரின் சர சரவும் தவிர காருக்குள் வேறு ஓசைகளும் இல்லை. அவனின் மூச்சு சற்று பலமாக வந்து கொண்டிருந்தது.  இவளுக்கு அந்த அமைதியின் அடர்த்தியைத் தங்க முடியாது போல தோன்றியது. 

"ஜெரோனி, நீங்கள் இப்போது போகும் இடத்தில் தான் இருக்கிறீர்களா?" 

"யா, ஒருவருடம் ஆகிறது. இங்கு என் அம்மா இறந்துவிட்டார், அதனால்தான் வந்தேன்."

"ஓ, ஐ ஆம் சாரி"

"பரவாயில்லை, அவர் முதியோர் இல்லத்தில் இருந்தார். கொரோனா என்று சொன்னார்கள். அவரைப் பார்க்கக் கூடவில்லை. எல்லாம் முடிந்து விட்டது."

"மிகவும் கடினமான காலம் தான்."

"நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை இந்த மாதம் முழுதும் சந்திக்கவில்லை. ஒன்றிரண்டு தடவைகள் வீடியோ காலில் பார்த்தது தான். அவர் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அதனால் என் மனதுக்கு சமாதானமாக இருக்கிறது. அவரது இறுதிக் கிரியையை நான் எங்களது இடத்தில் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இப்படியாகிவிட்டது."

"எது உங்களது சொந்த இடம்?"

"ஹா ஹா, கனடா முழுவதும் எங்களது சொந்த இடந்தான். ஆனால் நாங்கள் அந்த வாழ்க்கையை இழந்துவிட்டோம். நான் இந்த நாட்டின் பூர்வீகக் குடியை சேர்ந்தவன், மனிடோபா மாநிலந்தான் எங்களது பிறந்த இடம். இப்போது இங்கு வந்துவிட்டோம்"

"ஓ," இவளுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனைக் காயப்படுத்திவிட்டோமோ என்று தோன்றியது. "எனக்குத் தெரியவில்லை, சொந்த இடத்தைத் தொலைத்த வலியை நானும் அறிவேன். உன் நிலையை நான் உணர்ந்து கொள்கிறேன்"

"இட்ஸ் ஓகே. எனக்குப் பழகிவிட்டது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? இந்தியாவா?"

"இல்லை, ஸ்ரீ லங்கா"

"எனக்கு இந்தியாவை சேர்ந்த காதலி ஒருத்தி இருந்தாள். அவளும் உன் சாயல் தான். அதனால் தான் கேட்டேன்"

"இட்ஸ் ஓகே"

"அவளது பெயர் சிவாங்கி, அவள் ஒரு நர்ஸ். அவளை நான் மெடிக்கல் கேம்ப் ஒன்றில் சந்தித்தேன். இருபது வருடங்கள் இருக்கும். அவள் மனிடோபா வந்திருந்தாள். அவளை மறக்கவில்லை நான்"

"இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?"

"இல்லை, அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. ஐந்து வருடங்கள் அவளுடன் உறவில் இருந்தேன். பிறகு என்னால் முடியவில்லை."

"நல்லது."

"நீ இந்துவா? சிவு ஒரு இந்து. அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவள் குடும்பத்துக்கு மிகவும் பயந்தவளாக இருந்தாள். என்னால் அதை எதிர்க்கவும் முடியவில்லை, ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் நான் விலக வேண்டியதாகப் போனது."

"புரியவில்லை"

"ம்ம், அவளால் சேர்ந்து வாழ வர முடியவில்லை. அவளது குடும்பம் என்னை வெறுத்தது. இருந்தும் அவள் திருமணத்தை வலியுறுத்தினாள். திருமணம் செய்தால் மட்டும் தான் அவளுடன் வாழ முடியும் என்று சொன்னாள். என்னை மனிடோபாவில் இருந்து ஒண்டாரியோ வர சொல்லி வற்புறுத்தினாள்."

"நீங்கள் திருமணம் செய்ய விரும்பவில்லையா?"

"ம்ம், எனக்கு அப்போது இருபத்தைந்து வயதளவு தான் இருக்கும். எனக்கும் நிறைய பொறுப்புகள் இருந்தன. நான் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன். சேர்ந்து வாழ்வதற்கே திருமணம் என்பது எனக்குப் புதிதாக இருந்தது. எல்லாம் அவள் கர்ப்பமானதுடன் முடிந்து போனது."

"ஓ, குழந்தை என்னவானது?"

"அதை அவர்கள் குடும்பத்தினர் கலைத்து விட்டனர்."

அவன் மௌனமானான். அவன் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவியது இவளுக்கு கண்ணாடியில் தெரிந்தது. இருபது வருடங்களுக்கு முதல் கலைந்து போன குழந்தையின் சாயலை மனது யோசித்தது. இவளது மகன் போல இருக்கலாம். கொஞ்சம் கூட வெள்ளையாக இருந்திருக்கும். 

"அவள் என்னை மிகவும் விரும்பினாள். வீட்டை விட்டு வர அவளுக்கு முடியவில்லை. அவளது அறை யன்னல் ஏறித்தான் அவளை சந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் வீட்டில் தான் தொலைபேசி இருக்கும். நான் அவளது அறை பக்க தெருவில் காத்திருப்பேன். என்னை அவள் கண்டதும் சுவரேறி அவளறைக்குள் செல்வேன். பிறகு அப்படியே இறங்கி வீட்டுக்குப் போவேன். நான் அவளைத்  தொலைத்துவிட்டேன் "

"நல்ல காதல் கதை தான் வைத்திருக்கிறீர்கள்" இவளுக்கு என்னவோ போலிருந்தது. யார்தான் காதலைத் தொலைக்கவில்லை. எல்லோரும்தான் தொலைக்கிறார்கள். தொலைத்தது தெரியாமாலே தொலைக்கிறார்கள். 

"நீ காதலித்திருக்கிறாயா?"

"ஆம்,"

"அவனையே மணந்து கொண்டாயா?"

"என் முதற் காதலை மணக்கவில்லை"

"ஓ, உன்னை இரண்டு மூன்று தடவைகள் காதலிக்க அனுமதிக்கிறார்களா என்ன? காலம் மாறிவிட்டது தான்." அவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது இவளுக்கு கோபம் வந்தது.

"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"

"சிவு திருமணம் செய்திருப்பாளா என்று நான் யோசித்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன். நீயும் திருமணம் செய்த பிறகா சேர்ந்து வாழத் தொடங்கினாய்?"

"அப்படித்தான் விதிகள் எழுதப்பட்டிருக்கிறது, உங்கள் சிவு போல என்னால் என் காதலனை அறைக்குள் யன்னல் வழியாகக் கொண்டுவர முடியவில்லை."

அவன் புன்னகைக்கும் போது இன்னும் இளமையாகத் தெரிந்தான். 

"என் சிவு" அவன் திரும்ப சொல்லிக் கொண்டான். "உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நீ அதை செய்திருப்பாயா?"

"இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது மட்டுமில்லை, என் முதல் காதல் தொலை தூரத்தில் இருந்தது. அவனால் இந்த தொலை தூரக் காதலை சமாளிக்க முடியவில்லை. இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விட்டான்"

"நீ திருமணம் செய்து கொண்டததிற்காக வருத்தப்பட்டிருக்கிறாயா?"

"அப்படியில்லை, கொஞ்சம் சேர்ந்து பழகி அதன் பிறகு குடும்பம் என்று ஆரம்பித்திருந்தால் நல்லது என்று தோன்றி இருக்கிறது."

"அதை இப்போது உணர்கிறாயா?"

"அப்படி யார் தான் உணரவில்லை என்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து அதிகமானவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள். யாரேனும் இல்லை நான் ஒரு போதும் மண வாழ்க்கை சலித்ததாய் காணவில்லை என்று சொன்னால் அதை நான் பொய் என்பேன்." 

அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லையென்று அவனுக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவன் தன்னை மதிக்க மாடடானோ என்று சந்தேகம் வந்தது. அவளுக்கு தன் வாழ்வில் ஆணின் தேவை குறைந்து கொண்டே வருவது போல இருந்தது. அப்படி இருப்பதை மறைத்துக் கொண்டு திரியப் பழகி இருந்தாள்.  திருமணம் செய்தது தப்போ என்றுகூட அவள் யோசித்திருக்கிறாள். அவளுக்கு அப்போது தேவைப்பட்ட ஆண் துணையை அவளால் சாதாரணமாக அடைய நேர்ந்திருந்தால் அவள் திருமணம் செய்திருப்பாளா என்று தோன்றியது. அவன் தனக்குள் துளைத்து மனதில் கேள்விகளை உருவாக்குவதை அவள் விரும்பவில்லை. அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை. 

"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, நீ இயல்பாக பேசுகிறாய். நீ என்னை மதிப்பிட முயற்சிக்கவில்லை" அவன் புன்னகை மாறாமல் பதில் சொன்னான்.

"நீங்கள் இப்போது யாருடன் இருக்கிறீர்கள்?"

"என் வாழ்க்கை முழுவதும் நான் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. இப்போது எனது தோழியுடன் ட்ரைலர் ஒன்றில் வசிக்கிறேன். எனது வீடு, வாகனங்கள் எல்லாவற்றையும் விற்று விட்டேன். ஒரு சின்ன டிரக் வைத்திருக்கிறேன். நினைத்தவுடன் அதில் என் ட்ரெய்லரை கொழுவிக் கொண்டு பயணப்படுவேன். உனக்குத் தெரியுமா, என் வாழ்க்கையில் குறைந்தது இருபது பெண்களை சந்தித்திருக்கிறேன். ஒவொரு பெண்களும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் பற்றி சொல்லித்தான் பழகி இருக்கிறேன். அவர்களுடன் பழகிய நாட்கள் செக்ஸ் என்பது தாண்டி நாங்கள் மகிழ்வாகவே இருந்தோம். பிரியும் போதும் அப்படியே, அனைத்து கலாச்சாரங்களையும் நான் மதிக்கிறேன். என் மனத்துக்குப் பிடித்த  சிலவற்றைப் பின்பற்றுகிறேன். இப்படி உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா?"

"என் வாழ்க்கை ஒரு காதல் தோல்வியிலும் மற்ற காதல் திருமணத்திலும் முடிந்ததையொட்டி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால் கவலைப்பட அவகாசம் கிடைக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்கு காதல் அன்பு செக்ஸ் என்பது தாண்டிய வாழ்க்கை தேவைப்படுகிறது. நான் நாடோடியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். என் கவலையெல்லாம் ஏன் நான் நாடோடியாக இருக்க முடியாதிருக்கிறதென்பது தானேயல்லாது இருபது நாட்டு ஆண்களுடன் வாழ முடியாமல் போனதில்லை" 

"உன் ஆசைகளை நீதான் நிறைவேற்ற வேண்டும், மற்றவர்கள் அல்ல. நீ எப்படி உபேர் ஓடுகிறாய்? நான் உபேர் எடுப்பதில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் பெண்கள் இந்த வேலை செய்ய விருப்பப் படுவதில்லை."

"என் கணவரது வேலை கொரோனாவால் நின்று போனது. அரசாங்கம் தரும் பணம் போதுமாக இல்லை. என்னால் வேறு வேலை இப்போது தேட முடியாது. அதனால் நான் உபேர் ஓடுகிறேன். மற்ற நேரங்களில் சாப்பாடு டெலிவெரி செய்கிறேன்" இவளுக்கு கண் கலங்கியது. குடும்பத்தின் சுமை அவள் தோள்களில் அப்படி அழுத்தியது. இன்னும் என்னென்ன வரப்போகிறதோ தெரியவில்லை.

"ஓ, உன்னை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். உன்னால் முடிந்தால் இப்போது என்ன செய்ய விரும்புகிறாய்?"

"என் மகனுடைய உரிமைகள் பாதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை அவனுக்கு கொடுக்க வேண்டும். அதை முன்னிறுத்தி எதுவும் செய்வேன்" 

"ஓ"  ஒற்றை சொல்லோடு அவன் மௌனமானான். 

இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசவே மாட்டான் போல இருந்த அவனது கேள்விகள் அவளுக்குள் இறங்கி வேலை செய்யத் தொடங்கின. அவளால் முடிந்திருந்தால் எத்தனையோ செய்திருப்பாள். ஏன் முடியவில்லை என்று தான் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் அவள் முயற்சிக்கவில்லை. அவளுக்கான கோடுகளை யார் யாரோ போட்டுக் கொடுத்தார்கள். அவளது வேலை அதில் பிசகாமல் நடப்பது மட்டுமாகத் தானிருந்தது. அவள் அதில் சிறந்திருந்தாள். 

கார் நெடுஞ்சாலைகளில் இருந்து இறங்கி சாதாரண வீதிகள் தாண்டி இரு பக்கமும் வயல்கள் சூழ்ந்த குறுந்தெருக்களுக்குள் நுழைந்தது. குதிரைகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டு நின்றன. இவளுக்கு ஊர் நினைவு வந்தது. எப்போதிருந்து தான் இப்படி விலங்குகளைக் காண முடியும். அவள் அமைதியாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். மனம் கொஞ்சம் யோசனையில் இருந்தது. அவனுந்தான். அவள் மௌனம் அவனைக் காயப்படுத்தியிருக்கலாம்;  இல்லை அவனும் சிவுவை யோசித்திருக்கலாம். அப்படியே கண்களும். 

"நீ சந்தோசமாகவிருக்கிறாயா?"

"என்ன?" அவளுக்கு அப்படி ஒரு கேள்வி இருக்கிறதா என்று தெரியாதது போலத் தோன்றியது. அந்தக் கேள்வி எந்த மொழியிலும் கேட்கப்பட்டாலும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவளிடம் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்டதுமில்லை. சந்தோசம் எப்படியிருக்கும் என்பது அவளுக்கு மறந்துவிட்டது போலத் தோன்றியது. அவளுக்கு சடுதியாக அவனது அம்மாவின் சாவு நினைவுக்கு வந்தது. இந்த மரணம் எப்படியிருக்கும்? எந்தவகையான ஆறுதலை அது தரக்கூடும். திரும்பி அந்த விலங்குகளைப் பார்த்தாள். மழை பெலுக்குமாய்ப் போல இருந்தது. அவை தங்கள் குடிலுக்குள் புகுந்து கொண்டிருந்தன. அவள் அவனை இறக்கிவிட்டு இன்னும் ஒரு மணித்தியாலத்தில் செய்யப் போவதைப் போல. இந்த ஆயுளைக் கடந்தே ஆகவேண்டுமென்ற தீவிரம் அவளுக்குள் பொங்கி வழிந்தது. அவள் காரை நிறுத்திவிட்டு மழைக்குள் ஒடத் தொடங்கினாள்.


- நன்றி காலம் இதழ் 

Tuesday, 16 June 2020

அம்மாவாதலின் கதை....!

          ண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று திடீரென்று என்பதான ஒரு சந்தேகத்தில் எழும்பி குளியலறைக்குள் நுழைந்தாள். படித்திருந்த விஞ்ஞான அறிவு இது தண்ணீர்க்குடம் என்று சொல்லியது. ஒரு விதமான வலியும் தோன்றவில்லை. வலி எப்படி இருக்கும் என்றும் தெரியாது, ஏனெனில் இது தான் முதல் பிள்ளை. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது என்றபோதும் சற்றே முன்னே பின்னே ஆகும் என்றதும் அவளுக்கு தெரியாமல் இல்லை. குழந்தைப்பேறு விடுமுறை காலம் அன்று தான் தொடங்கியிருந்தது. முதல் நாள் கூட வேலைக்கு போய் விட்டு வந்து இன்னும் இரண்டு நாள் கொஞ்சம் ஓய்வாய் இருக்கலாம் என்று இருந்த போது இப்படி தொடங்கியது கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒருவித நிம்மதி நெஞ்சில் பரவாமல் இல்லை.

ஷவரை இயக்கி சூடு உணரக்கூடிய மாதிரி தண்ணீரில் தலையை நனைத்தபடி யோசித்தாள். இனி ஹாஸ்பிடல் போக வேணும். அதுக்கான பையை நேற்றிரவு தான் கணவனோடு சேர்ந்து அடுக்கி முடித்திருந்தாள். நேற்று பின்னேரமாய் நடை பயிற்சி முடிந்து வரும்போது ஏதோ ஒரு மாற்றம் உணரப்பட்டதுதான். தோலில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் வரும் வலி போல கண நேரத்துக்கும் குறைவான பொழுது உணரப்படட மெல்லிய வலி அது. என்னவோ உள் மனம் சொல்ல இரவே எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டாள். ஷவரில் இருந்து வெளியில் வந்து தலை துவட்டிய படியே கணவனை அழைத்து விபரம் சொல்லிக் கொண்டாள். அவன் எழுபது நிமிடங்கள் அளவு காரில் வந்தால் எடுக்கும் தூரத்தில் வேலையில் இருந்தான். அவன் வந்து ஹாஸ்பிடல் போகும் அளவுக்கு காத்திருப்பதில் எந்த சிக்கலும் வந்துவிடப் போவதில்லை என்று தோன்றியது. அனால் அவனது மனத்திருப்திக்காக ஒரு டாக்ஸியை பிடித்து போய்விடுவதாய் சொல்லி விட்டு போனை வைத்துவிடடாள். மாடிப் படிகள் இறங்கி வந்தால் குழந்தையின் கார்சீட்டின் நினைவு வந்தது. அதில்லாமல் குழந்தையை வீடு கொண்டுவர முடியாது. உடைக்காமல் அப்படியே இருந்த அந்தப் பெட்டியுடன் போராடி ஒரு மாதிரி அதை வெளியில் எடுத்துக் கொண்டு டாக்ஸியில் ஏறும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தண்ணீர்க்குட நீர் மாதவிடாயின் முதல் முதல் நாள் அளவுக்கு வெளியேறிக்கொண்டிருந்தது. பெரிதாக ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 

ஹொஸ்பிடலில் ஒன்றும் சொல்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். குழந்தை பிறக்க இன்னும் ஒரு நாளாவது ஆகும் என்று சொன்ன போது சோர்வாக இருந்தது. எப்படி எப்படியெல்லாமோ மனதை தயார் செய்திருந்தாலும் காத்திருத்தல் எப்போதும் இலகுவாய் இருப்பதில்லை தானே. எதற்குதான் காத்திருக்க யார்தான் தயாராகவிருக்கிறார்கள். ஏன் இந்தக் குழந்தை தங்கக்கூட அவள் காத்திருக்கவில்லை. அவளுக்கு எப்பவும் எல்லாமே உடனே உடனே நடக்க வேண்டும். நினைத்ததை சாதித்த பழக்கம் அவளை இம்சைப் படுத்தியது. தாதி வந்து சும்மாயிருக்க வேண்டாம் என்று நடக்க சொன்னபோது எரிச்சல் வந்தது. இனியில்லை என்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள் என்பதை அறிந்தே இருந்தாள். இன்னும் ஒரு நாள் இந்த தாதிமார்களை, ஹாஸ்பிடல் அறையை சகித்துக் கொண்டிருக்க இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, நடந்தால் கொஞ்சம் சீக்கிரமாக குழந்தை பிறந்து விடும் என்ற ஆசையும் சேர வெறி பிடித்தவள் மாதிரி நடக்க தொடங்கினாள். கணவன் பாவம், வேறு வழியில்லாமல் அவள் கையைப் பிடித்தவாறும் அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிடில் பின்னேயாய் திரிந்து கொண்டிருந்தான். குழந்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இறங்கி வரும் போது இரவு பத்தரை ஆகிவிட்டிருந்தது. அதுக்குள் தண்ணீர்க்குட நீர் முழுவதும் வெளியேறி முடிந்து விட்டிருந்தது. அவள் தாதியிடம் சொல்லிக் கொண்டு திரும்பவும் குளித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டாள். இனி நடக்க முடியும் என்று தோன்றவில்லை. வலியும் தொடங்கவில்லை. இப்போது அவளுக்கு உண்மையாகவே கோபம் வந்தது. ஆனால் யாரைத்தான் கோபித்து கொள்வது என்று தெரியவில்லை.

எல்லா வசதிகளுடனும் கூடிய அறை அது. அவள் அறைக்கு எதிராக நர்சிங் ஸ்டேஷன் இருந்தது. இவளது கட்டிலிலிருந்து அவர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது. அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தாலும் இவளது பார்வை படும்போது யாரும் புன்னகைக்க மறக்கவில்லை. "இண்டைக்கு என்ன ராசியோ தெரியவில்லை. ஒரு குழந்தைகளும் வர மாட்டினம் எண்டு அடம்பிடிக்கினம்" சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்ன அந்தப் பெண் மருத்துவருக்கு கோபமே வராது போலத் தோன்றியது. "எத்தனை குழந்தைகள் இண்டைக்கு பிறப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" இவளுக்கு தன் மகனோடு இந்தப் பூமிக்கு வரப் போகும் ஆண் பெண் தேவதைகளை, போராளிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தது. "நீ நம்ப மாடடாய். இன்னும் மூன்று பேர் உன்னைப் போல இருக்கினம். தண்ணீர்க் குடம் உடைந்து, இன்னும் வலி வராமலும், செயற்கை வலி மருந்து ஏற்றியபடியும். அவர்களுக்கு குழந்தை கூட இறங்கி இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படியும் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் ஆகும். ஆனால் உனக்கு நாளை தான் பிரசவம் நடக்கும். யோசிக்காதே. வலி தானாகவே தோன்றினால் நல்லது. அதற்குத்தான் காத்திருக்கிறோம். நீ கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திரு." டாக்டர் போய்விட்டார். இவள் பேசாமல் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். கணவனுக்கு இவளைப் பார்க்க பார்க்க விசர் பிடித்திருக்க வேண்டும், சாப்பிட ஏதும் வாங்கி வருகிறேன் என்று கீழிறங்கி போய்விட்டான்.  

இரவு பத்தரை போல டாக்டர் வந்து வலி வருவதற்காண மருந்து ஏற்றுவதுதான் அடுத்த நிலை என்னும் போது எதையாவது செய்து தொலையுங்கள் என்ற நிலைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள். வலிக்குரிய மருந்து ஏற்றப்பட்டு கொழுவி விட்டிருந்தார்கள். வலியை மறக்கும் மருந்தை எடுப்பதை அவள் விரும்பவில்லை. இந்த பிரசவவலி பற்றி எல்லோரும் கதை கதையாய் சொல்லியிருந்தார்கள். அதை உணர்ந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதோடு அந்த மருந்தை முள்ளந்தண்டில் ஏற்றுவார்கள், அதனால் ஏற்படும் பக்கவிளைவு நெடுங்காலம் இருக்கும் என்றதை அறிந்திருந்தாலும், வலியை அனுபவிப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை என்பதாலும் அவள் பேசாமல் இருந்தாள். கணவன் அறைக்குள் இருந்த சோபா படுக்கையில் தூங்கிவிட்டிருந்தான். அவளைவிட அவன்தான் உணர்ச்சிப் பெருக்கில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் மனது ஒருவித அமைதியில் இருந்தது. கல்யாணம் முடிந்து, ஒரு வருடம் ஒருவரை ஒருவர் அறிந்து, உலகம் சுற்றி பின் திடடமிட்டு குழந்தை என்னும் அடுத்த நிலைக்கு போய்விட்டிருந்தவர்கள் அவர்கள். எப்படியோ குழந்தை பிறந்துவிடத்தான் போகிறது. முயற்சி செய்து சுகப்பிரசவமாய் இருக்கப் பார்ப்பார்கள். இல்லை என்றால், வெட்டிக் கிழித்து எடுப்பார்கள்.  இதில் எதை நினைத்து பயப்பட வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனுக்கோ அவளது அமைதி வியப்பாய் இருந்தது, அதிலேயே அவனுக்கு டென்ஷன் ஏறி விட்டிருந்தது. இது போதாதென்று தொடந்து அழைத்த சொந்தங்கள் அவனை இன்னும் குழப்பி விட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரது போனையும் அவளே பதில் சொல்லி வைக்க வேண்டியதாயிற்று. அவளுக்கு அதிலொரு கஷ்டமும் இல்லை. வலி வந்து போகும் இடைவெளி குறைய ஆரம்பித்தது. ஆனால் குழந்தை தான் கர்ப்பப்பையில் இறங்க  மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. 

அவள் இந்தக் குழந்தையை மகிழ்வாகவே ஏற்றிருந்தாள். ரொம்பக் காலமாய் காத்திருக்க வைக்காமல், நினைத்த உடன் கருவில் தோன்றியதாலோ என்னவோ குழந்தை அமையாமல் போய் ஒவ்வொரு மாதங்களையும் கண்ணீரில் கரைக்கும் பெண்களின் வலி அவளுக்கு ஏட்டளவிலேயே தெரிந்திருந்தது. குழந்தையை சுமக்கும் காலங்களையும் அவள் வெகு இயல்பாகவே கடந்திருந்தாள். வழமையாக இருக்கும் கர்ப்ப கால அவஸ்தைகளையும் சாதாரணமாகவே கடந்தாள். பிடித்ததை தின்றாள். வழமை போல் வேலைக்குப் போய் வந்தாள். வீட்டு வேலைகளிலும் குறை வைக்கவில்லை.  "உனக்கு அறிவிருக்கா, நீ என்ன நினைச்சுக் கொண்டு திரியிறாய்" என்று கணவன் கத்திப் பார்த்து களைத்தான். அவள் இயல்பாய், வெகு இயல்பாய் கடந்தாள். கிட்டத்தட்ட நூறுக்கும் கூடவாய் புத்தகங்கள் வாசித்து முடித்திருப்பாள். அது போதாதென்று சிறியவர் பெரியவர் பார்க்கும் படங்கள் என்ற பேதமில்லாமல் எல்லாப் படங்களும் பார்த்து தீர்த்தாள். பார்ப்பது மட்டுமில்லாமல் குழந்தைக்கும் விளங்கப் படுத்தினாள். அவளுக்கு யாரைப் பற்றியும் ஒரு கவலையும் இருக்கவில்லை. தனக்குப் பிடித்த விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் படித்த நாவல்களைக் கூட திருப்பி வாசித்து தீர்த்தாள். போதாக்குறைக்கு தனக்குப் பிடித்த கணக்கு, கெமிஸ்ட்ரி புத்தகங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு கணக்குப் போட்டுக் கொண்டிருந்த அவளை கணவன் விசித்திரமாகப் பார்த்தான். தன் குழந்தைக்கு எல்லாவற்றையும் கடத்தி விடவேண்டும் என்ற தீவிரம் அவளை அனைத்தையும் செய்ய வைத்தது. குழந்தை பிறந்ததும் தனக்கென்ற ஒரு உலகை நெய்து விடுமென்பதில் அவளுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. அவளும் அதையே விரும்பினாள். சுயமாய் இயங்கும் தன் மூலமாய் இந்த உலகுக்கு வருகை தரப்போகும் உயிரை கொண்டாட விரும்பினாள். பிறந்து வளரும் போது எந்தவிதக் கடடாயங்களையும் அந்தக் குழந்தை மேல் திணிக்கும் எண்ணம் அவளுக்கு தூண்டற இல்லை. கருவில் இருக்கும் போது மட்டுமே தன்னுடலின் ஒரு அங்கமாய் இருக்கும் அந்த உயிருக்கு சில விஷயங்களை சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. தன மனம் திருப்திபடும் அளவுக்கு அவள் கர்ப்ப காலத்தைக் கொண்டாடியிருந்தாள்.

அடுத்த நாள் விடிந்து காலை பத்தரை ஆகிவிட்ட போதும், குழந்தை இன்னும் இறங்க இடமிருப்பதாக காத்திருக்க நேர்ந்தது. ஒரு வைத்தியரே சேவையில் இருந்ததாலும் இன்னும் மூன்று கர்ப்பிணிகள் பிரசவிக்கப்  போராடிக் கொண்டிருந்ததாலும் விடிகாலை ஐந்தரை போல இவளுக்கு ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த வலி கூட்டுவதற்கான ஹோர்மோனை நிறுத்தி விட்டிருந்தார்கள். வயிற்றின் வெளிப்பகுதியில் பொருத்தியிருந்த கருவியில் குழந்தையின் இதயத்துடிப்பும் ஒக்ஸிசன் அளவும் ஓடிக் கொண்டிருந்தது. இவள் அங்கேயிங்கே நகர்ந்தாள் என்றால் அது நர்சை கூப்பிட்டது. அவர்களில் ஒருவர் வந்து, மீண்டும் அந்தக் கருவியை சரியாய் வைத்து சிரித்து விட்டுப் போனார்கள். குழந்தை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்ததாலும் இவளும் வலியைத் தாங்க மாட்டாதவள் போல இல்லாததாலும் நர்ஸ்மாரும் பேசாதிருந்தனர். இயற்கையாய் குழந்தை பிறந்துவிடும் என்பதில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தவர்களாய் அவர்கள் இருந்தனர்.  தண்ணீர் எல்லாம் வடிந்து போனபோதும், முப்பது மணித்தியாலங்கள் கடந்த போதும் குழந்தையின் இதயத்துடிப்பில் எந்த வித மாற்றங்களும் இல்லை. இவளிடமும் தான். அடிக்கடி வந்த டாக்டர் பார்த்துவிட்டு, "உன் குழந்தை தெரியாமல் தண்ணீர்க்குடத்தை உடைத்துவிட்டது, இப்போது வரப்பிடிக்காமல் உள்ளேயே இருக்க பார்க்கிறது" என்று சொல்லி சிரித்தபோது அவளுக்கும் அது உண்மையாகவிருக்குமோ என்று தோன்றியது. நர்ஸ்மார் பெரிய பந்தொன்றைக் கொண்டுவந்து அவளை அதன் மீது சரிந்து படுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இன்னும் கொஞ்சம் இறங்க வேண்டும், இன்னும் கொஞ்சம் திரும்ப வேண்டும் என்னும் மந்திரங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர். இவளுக்கு வலி தாங்க முடியாமல் மயக்கம் வருமாய்ப் போல இருந்தது. ஆனாலும் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு இனியும் காத்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.

பதினொன்றரை போல வலி உயிர் போவது போல வந்து வந்து போனது. இவள் நிலத்தில் கால் விரல்களை அழுத்தியும், கட்டில் சட்டங்களை இறுக்கப் பிடித்தும் வலியை கட்டுக்குள் வைத்திருக்கப் போராடினாள். "வலியை தாங்குவதற்கே உன் சக்தி முழுக்க செலவழிக்கிறாய். இதைவிட குழந்தை நன்கு இறங்கி வந்ததும் அதை வெளியே தள்ளுவதற்கும் உனக்கு சக்தி வேண்டும். இப்பவே ஒரு நாள் தாண்டிவிடடாய். அவசரமாய் சிசேரியன் செய்யும் தேவை நேர்ந்தாலும் நீ எபிடூரல் (வலி மறக்கும் ஊசி, முள்ளந்தண்டில் ஏற்றுவது) போடுவது நல்லது." வரும் போகும் நர்ஸமாரும் டாக்டரும் திரும்ப திரும்ப வற்புறுத்தினர். அவளுக்கும் அவர்கள் சொல்லும் நியாயம் விளங்குமாய் பட்டது. அவளால் இனி என்ன நடக்கவிருக்கிறது என்று சொல்ல முடியாமல் இருந்தது. "Go with the flow" மனநிலைக்கு அவள் வந்து விட்டிருந்தாள். ஊசி ஏற்றி முடிக்கும் போது மதியம் பன்னிரண்டு ஆகிவிட்டிருந்தது. அவள் அதோடு படுத்து எழும்பியபோது பின்னேரம் நான்கு மணி.

ஐந்து மணிக்கு அறைக்குள் வந்த டாக்ட்டருக்கும் தாதிமாருக்கும் ஒருவித தவிப்பும் பரிதாப உணர்வும் நிரம்பியிருந்தது போல இவளுக்குப் பட்டது. இடுப்புக்கு கீழ் எந்தவித உணர்வும் இருக்கவில்லை. கலக்கமூட்டும் எந்தவித சமிக்ஞகளையும் குழந்தை தரவும் இல்லை. இவள் அவர்களது முகத்தையே களைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு எட்டுமணியளவில் குழந்தை இரங்கி இறங்கி வந்த போதும் இன்னும் கொஞ்சம் திரும்பினால் இலகுவாக இருக்கும் என்ற நர்ஸை அடக்கி, "இல்லை, இனியும் வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களால் இயன்றவரை தள்ள முயற்சியுங்கள்" என்று முடித்துக் கொண்டார் டாகடர். இடுப்புக்கு கீழ் வலி துப்புரவாக தெரியாத காரணத்தால் வயிற்றில் பொருத்தப் பட்டிருக்கும் கருவியில் வலி வரும்போது தெரியும் சமிக்ஞகளை வைத்து நர்ஸ்மார் சொல்லும் போது பெருமூச்செடுத்து குழந்தையை கீழே தள்ளவேண்டும். இவளும் தாதிமாரும், கணவரும் சேர்ந்து தள்ளியும் குழந்தை ஒரு அளவுக்கு கீழ் வரவே இல்லை. பத்து மணியளவில் எல்லாரும் சோர்ந்த போன பின்பு இவளுக்கு கொஞ்சமாய் பயம் வந்தது. குழந்தை ஏதோ இடத்தில் சிக்கிக் கொண்டது போல விரித்த கால்களை சேர்க்க முடியாத அவஸ்தையாய் உணர்ந்தாள். "இப்ப ரெண்டு வழியிருக்கு. பிப்டி பிப்டி சான்ஸ். ஒண்டு போசெப்ஸ் ஆயுதம் பாவித்து குழந்தையின் தலையைப் பிடித்து இழுப்பது இல்லையோ சிசேரியன் செய்து எடுப்பது. இவ்வ்ளவு கஷ்டப்பட்டுவிட்டு சிசேரியன் போவதத்திற்கு முன் போசெப்ஸ் பாவித்து எடுக்க முயற்சிக்கலாம்" டாக்டர் சொல்ல இவளுக்கு விசர் ஏறியது. இதை முதலிலே சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. கணவனோ இவளை ஆறுதல் படுத்தும் நோக்கில், "இவளவத்துக்கு பொறுத்திட்டாய், இதையும் செய்து பார்ப்பம். இல்லாட்டி பட்டதெல்லாம் வீண். என்ட செல்லம் எல்லே" என்றதோடு நிறுத்திக் கொண்டான். இவள் என்னவெண்டாலும் செய்யுங்கோ என்றவாறு பேசாமலே இருந்தாள். குழந்தையை போசெப்ஸ் வைத்து இழுத்தபோது அது அவளைக் கிழித்தபடி வழியெங்கும் காயம் பண்ணிக் கொண்டு சிவனே என்று வந்து சேர்ந்தது. குழந்தையைத் தூக்கி டாக்டர் காட்டியபோது செஞ்சாந்து நிறத்தில் இரத்தம் வழிந்தபடியிருந்தது. இவள் தொடையெல்லாம் இரத்தம் பாய்ந்தோடி நனைத்தது. இவள் குழந்தையையும் உணர்வு மரத்த கால்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முப்பத்தாறு மணி நேரம் காத்திருக்க வைத்து வந்து சேர்ந்த மகனின் தொப்புள் கொடி வெட்டி, முகம் பார்த்து சற்றே மயங்கி அமர்ந்த கணவன், எந்தவித உணர்வுகளும் முகத்தில் காடடாது பேசாது  இருந்த அவளைப்  பார்த்து இவளெல்லாம் என்ன பிறவி என்று நினைத்திருந்தால் கூட ஆச்சரியப் பட்டிருக்க மாடடாள். குழந்தை கூட அழாமல் இருந்தது அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருக்கும் பேச்சாய் இருந்தது. "இவன் உண்மையிலேயே பைட்டர் தான்" டாக்டர் சந்தோஷமாகவே குழந்தையைத் தூக்கி அவளுக்கு காட்டினார். அவளுக்குள் அமைதி நிறைந்து விட்டிருந்தது. தன் குழந்தை என்று அறிமுகமாகும் அந்த உயிரை புன்னகையுடன் பார்த்தாள். அவள் அழவில்லை. தான் சரியாகத் தான் குழந்தையை வரவேற்கிறேனா என்று அவளுக்கே சந்தேகமாய் இருந்தது. படங்களிலெல்லாம் கண்ணீர் வழிய வழியப் பார்க்கும் மனைவிமார் நினைவுக்கு வந்தனர்.  குழந்தையை நர்ஸ்மார் சுத்தப்படுத்த டாக்டர் அவளுக்கு தையல் போடவாரம்பித்தார். "நீங்கள் ஏன் தையல் போடவேண்டும். நீங்கள் வெட்டினீர்களா" இவளுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கியது. குழந்தை பிறக்கும் போது வழி ஏற்படுத்திக் கொடுக்க சிறிது தூரத்துக்கு வெட்டுவது சாதாரணம் என்பதை இவள் அறியாமல் இல்லை.

"இல்லை, உன் குழந்தை கிழித்துக் கொண்டுதான் வந்தான். நான் என்ன செய்ய" டாக்டர் தையல் போடுவதை நிறுத்தாமல் பதில் சொன்னார். எப்பிடுறலின் வலு குறைந்து போனது போல தோன்றியது. ஒவ்வொரு தையலும் அவளுக்கு வலித்தது. அதை டாக்டருக்கு சொன்னபோது, "குழந்தையைப் பார். உனக்கு வலியெல்லாம் தெரியாது" அவர் தையல் போடுவதிலேயே கண்ணாயிருந்தார். இவளுக்கு விசர் ஏறியது. "குழந்தையைப் பார்த்தால் வலி தெரியாது என்று யார் உங்களுக்கு சொல்லியது. நீங்கள் என்ன குழந்தைக்கா தையல் போடுறீங்கள்"  இவள் குரல் உயர்ந்தது. இவளுக்கு விளங்கவில்லை. குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை எப்படியோ பிறக்கும் என்று இவளுக்கும் தெரியும். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் இவளுக்கு எப்படி வலி தெரியாமல் போகும். நர்ஸ் இவளைப் பார்த்து புன்னகைத்தாள். "இவர் இதை எல்லாப் பெண்களுக்கும் சொல்வார். இந்தக் கேள்வியை ஒருவரும் இவரைக் கேட்கவில்லை. தாங்க் கோட். நீ கேட்டுவிட்டாய்" என்றாள். "இவ்வளவு தையலை நான் எதிர் பார்க்கவில்லைதான்" என்ற டாகடரைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. குழந்தையைப் பத்திரமாய் வெளியே எடுக்க அவர் பட்டபாடு நினைவுக்கு வந்தது. இவள் வலியைத் தாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டாள். டாக்டருடன் கத்தி கணவனைக் கலவரப்படுத்த இவள் விரும்பவில்லை. கடைசியில் குழந்தையை அவள் மார்பின் மேல், குழந்தையின் தலை அவளது கழுத்துக்கு கீழ் இருக்குமாறு குப்புறப் போட்டிருந்தார்கள். குழந்தையின் மென் சூடு அவளுக்கு இதமாக இருந்தது. லேசாக எழும்பி பதியும் முதுகைப் பார்த்தவாறு அவளும் தூங்கிப்  போனாள்.   

இரு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த பிறகும் அவளால் எழும்பி நடக்க கொள்ள சிரமமாய் இருந்தது. சிறுநீர் கழிக்கப் போனால் உறுப்பெல்லாம் அனலாய் எரிந்தது. இது போதாதென்று மிக முக்கியமாய் அவளுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லார் சொன்னதையும் செய்து பார்த்தும், தின்று பார்த்தும் சொட்டாய் கூட சுரக்க காணவில்லை. ஹொஸ்பிடலில் குழந்தைக்கு கொடுத்த பால்மா வகைப் பாலை வாங்கி குழந்தைக்குப் பருக்கினாள். குழந்தைக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அது தருவதைக் குடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கியது. கட்டிலில் கிடத்திவிட்டு அங்கு இங்கு நகர்ந்தாள் என்றால் நொடியில் எழும்பி அழுதது. "நானெல்லாம் உனக்கு ஐந்து வயது வரை பால் தந்தனான், தெரியுமோ? " அம்மா புலம்பித் தள்ளினாள். இவளுக்கு மனது என்னவோ செய்தது. தாய்ப்பால் கொடுக்கும் எண்ணம் இருந்ததால் தான் குழந்தைக்கு கொடுக்கும் பால்புட்டி கூட வாங்கி வைக்கவில்லை என்பதை ஏனோ சொல்ல மனம் வரவில்லை.

அவள் குழந்தையை வரவேற்பதற்கான எல்லா வகைதொகையையும் குறையின்றி செய்துவிட்டிருந்தாள். குழந்தையின் அறையில் அலுமாரிகள் முழுக்க தேவையான உடுப்புகள், போர்வைகள் துவாய்கள் என்று நிரம்பிக் கிடந்தன. சுவரில் குழந்தையின் பெயர் அழகாய்த் தொங்கியது. குழந்தை பிறக்க முதலே தனது மனதுக்குப் பிடித்த பெயரை அர்த்தத்துடன் தெரிவு செய்திருந்தாள். கீழே முன்னறையில் நடுவே ஏணை தொங்கியது. இந்த கனடா நாட்டில் ஏணை கட்ட அவள் நிரம்பவே சிரமப்பட்டாள். கடைசியில் முண்ணூறு டொலர்கள் செலவழித்து போட்ட ஹூக்கில் தனது சாறியையும் கட்டி வைத்திருந்தாள். எதுவும் செய்யவில்லை என்று தன் மனம் சொல்லிவிடாத அளவுக்கு எல்லாவற்றையும் செய்துவிட்டிருந்தாள். இப்போது ஏணை குழந்தையின்றி தானே கிடந்து ஆடியது. குழந்தையை கீழே கிடத்தினாள் எங்கே தன்னைவிட்டு நகர்ந்து விடுமோ என்ற தீவிரம் அவளின் மூளை முடுக்கெல்லாம் பரவித் தின்றது. 

"பிள்ளைக்கு தாய்ப் பால் கொடுத்தால் தான் பிள்ளைக்கு உன்னில பாசம் வரும். பாலைக் கரைச்சு யாரெண்டாலும் குடுக்கலாம் தானே," பிள்ளையைப் பார்க்க வாறவர் போறவர் என்று எல்லார் வாயும் இதையே முணுமுணுத்தது. அவள் ஒரு கிழமை தாண்டி இரண்டாவது கிழமையாகியும் பால் சுரக்கவில்லை என்றதும் ஒருவிதமாய் தவித்துப் போனாள். அவள் அழுகையில் குழந்தை திடுக்கிட்டது. கணவனும் கரைந்தான். ஒரு கட்டத்தில் கணவன் அழைத்து சொல்லி வீட்டுக்கு கவுன்சிலிங் செய்ய வந்த தாதியும் கண் கலங்கினாள். "இயற்கையாய் வலி வரவில்லை தானே. வலி வாறதுக்கு உடம்பில் சுரக்கும் ஹோர்மோன் தான் பால் சுரப்புக்கு உதவி செய்யும். உங்கள் உடம்பில் இன்னும் அந்த ஹார்மோனின் தாக்கம் போதாததாக இருக்கலாம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள்" என்றுவிட்டு, மார்பு வலியெடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு தாதி போன பின்னும் இவளுக்கு மனது ஆறவில்லை. குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டு இல்லாத எல்லாத் தெய்வங்களையும் கூப்பிட்டு கூப்பிட்டு அரற்றி அரற்றி அழத் தொடங்கிய அவளை கணவன் அந்நியளாகப் பார்த்தான். அவன் பார்த்திருக்க அவள் யாரோவாகிப் போனது போலிருந்தது அவனுக்கு.  

குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும் என்ற கற்பிதம் இவளுக்குள் எப்படி ஊறிப்போனது என்று அவளுக்கு விளங்கவேயில்லை. ஒருவேளை தான் ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடித்ததாலும் வாழ்நாளில் ஒரு போதும் பால் புட்டியை வீட்டில் கண்டதில்லை என்பதாலும் இருக்கலாம். இல்லையென்றால் படித்த விஞ்ஞான அறிவு மட்டுமில்லாமல் போகவும் வரவும் பார்த்த டாக்டரில் இருந்து கதைத்த எல்லா மனிதர்களும் தாய்ப்பால் குறித்து எடுத்த வகுப்பால் இருக்கலாம். எல்லா இருக்கலாம்களும் தாண்டி இவளுக்கும் பால் கொடுப்பதில் எந்தவித சிக்கல்களும் இருக்கவில்லை. தான் என்ன பாவம் செய்தேன், ஏன் இப்டியாச்சு என்ற கேள்வி அவளை சித்திரவதைப் படுத்தியது. பால் குடிக்காட்டி குழந்தை தன்னைவிட்டு தூரப் போய்விடும் என்ற எண்ணமே அவள் மனதை கூர் கூறாய் வெட்டி தெருவெங்கும் சிதறி எறிந்தது. "குழந்தை பிறக்க முதலே அது வளர்ந்து தண்ட விருப்பத்துக்கு என்னவும் செய்யலாம்; நான் கேட்க மாட்டேன் எண்டு வாய் கூசாம சொல்லிக் கொண்டிருந்தா இப்படித்தான் நடக்கும். அது தான் பிள்ளை இப்பவே பழகிறான்." போற போக்கிலே அவர்கள் ஆயிரம் சொன்னார்கள். "பிள்ளைக்கு நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கவேணும். இந்த நிமியிராலஜி பார்க்கிறவனெல்லாம் லூசனோ, அதிஷ்டமில்லாத பெயரை வைச்சா வேற என்ன நடக்கும்" எல்லார் வாய்களும் கதைத்தன. இவளதைத் தவிர. குழந்தையை மார்பில் போட்டவாறு அவள் தூங்கிப்போனாள். கன்னத்தடி எல்லாம் கண்ணீர் காய்ந்து கிடந்தது.

கனவில் குழந்தையைக் காணவில்லை. இவள் கனதூரம் நடந்து காட்டுக்குள் வந்துவிட்டிருந்தாள். நல்ல வேளை குழந்தையைக் கொண்டுவரவில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஏன் நடக்க வெளிக்கிட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பதினேழு தையல்கள் போட்டிருந்த நினைவு. ஒரு சுகப்பிரசவம் இவ்வளவு தையல்களில் முடிந்தது குறித்து அவளுக்கு எந்தவித குறைகளும் இல்லை. இரத்தமும் வலியுமாய் கால்கள் பின்னடித்தன. ஆனாலும் அவளால் நடப்பதை நிறுத்த  முடியவில்லை. நிறுத்தவும் தோன்றவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து தூர ஓடும் தீவிரத்துடன் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். அவளின் மனமெல்லாம் மரங்களும் செடிகளும் இடமில்லாது அடைத்துப் பிடித்தபடி வளர்ந்திருந்தன.  கொடிகளும் விழுதுகளும் சிக்கிக் கொண்டு பின்னல் வலையாய் அங்கங்கே எறிபட்டிருந்தன. இருட்டு உள்ளேயும் வெளியும் கவிந்திருந்தது. பொட்டு வெளிச்சம் கூட இல்லாத அந்தக் காட்டின் பசுமையும் குளிர்மையும் அச்சத்தைத் தந்தன. நீரோடும் இடமாய்ப் பார்த்து குதித்து காலை கழுவ வேண்டுமென்ற தீவிரம் வலுப்பட்டது. அவளுக்கு அந்த இருட்டிலும் கண் தெரிந்தது. அவளுக்கு மூச்சு முட்டி பிரக்கேறியது. 
தூரத்தில் மெலிதாய் ஓடிக்கொண்டிருந்த நீரோடையில் இறங்கிக் கொண்டாள். அவளது இடுப்புக்கும் கொஞ்சம் கீழாய் தான் ஆழம் இருந்தது. ஹாஸ்பிடல் கவுன் நனைந்து அவள் இறங்கிய இடமெல்லாம் சிவப்பாய் கலைந்தது. அவளைச் சுற்றி வளையம் வளையமாய் தண்ணீர் சுற்றி ஓடிற்று. கலைந்த உடம்பும் வெக்கைப் பிசுபிசுப்பும் சரியாகிவிடும் என்ற நினைப்பில் அப்படியே நின்றாள். எதையோ கரைத்துத் தீர்த்துவிடும் வேகம்; இப்படியே கரைந்து கரைந்து பிள்ளை பிறக்க முதல் நாளுக்குள் போகும் வேகம். ஆனால் நீருக்கு அதே வேகம் இருப்பதாய் தெரியவில்லை. அது தன்பாட்டுக்கு கடனே என்று ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே நடந்தவள் நீருக்குள் முக்கால் பங்கு தெரிந்து கொண்டிருந்த கல்லொன்றின் அடியில் அமர்ந்து கொண்டாள். 

"இஞ்ச, நான் என்ன செய்தனான் எண்டு இப்படியாய் பண்ணிட்டாய். உனக்கு விரதம் இருக்கிறன் எண்டு சொல்லி ஏமாத்தினானா, இல்லை ஏதும் நேர்த்தி செய்றன் எண்டு சொல்லி பொய் சொன்னனா?" அவள் தன் போக்கில் கதைத்துக் கொண்டிருந்தாள். கல் பேசாமல் இருந்தது. இப்போது இரத்தத்தின் அளவு குறைந்தது போலத் தோன்றியது. தண்ணீர் வரத்து அப்படியே தான் இருந்தது. அவளுக்கு அப்படியே இருந்துவிடலாம் போல தோன்றியது. 

"ஏய், இஞ்ச என்ன கனவு காண்கிறீரே, பிள்ளை இவ்வளவு நேரமாய் கத்திக் கொண்டிருக்கிறான். கேட்கலையா? எழும்பும், ஏய்" அவள் கண் விழித்த போது கணவன் கத்திக் கொண்டிருந்தான். கூடவே குழந்தையும். அவள் பதற்றத்துடன் குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள். 

"பாலைக் கரைச்சு கொடுக்கிறது தானே" இவளுக்கு சினம் மூண்டது. "எல்லாரும் தானே பால் கரைச்சுக் குடுக்கலாம்" அவளுக்கு நினைவு வெறியூட்டியது. 

"அதெல்லாம் கொடுத்தாச்சு, அதுக்குப் பிறகும் கத்தி அழுதா நான் என்ன செய்ய" கணவனுக்கும் குழந்தையைப் பார்க்க கவலையாய் இருந்தது. "என்னத்தை ஆர் கொடுத்தாலும் அது நீர் தூக்கின பிறகுதானே அமைதியாகுது. நீர் தானே அம்மா"

அவள் கொஞ்சமாய் விசித்துக் கொள்ள தொடங்கியிருந்த குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டாள். குழந்தை கண் மடல்களை சிமிட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது. அவள் சிரிக்க ஆரம்பித்தாள். காடு கரையெல்லாம் அதிர அதிர சிரித்தாள். அவள் சிரிப்பில் ஆறு சலசலத்தது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. செடி கொடியெல்லாம் ஆடி அலைந்தன. காய்ந்த சருகுகள் எழுந்து மேலெல்லாம் பறந்தன. குழந்தை ஏனோ எழும்பவில்லை. அதுபாட்டுக்கு தூங்கிக் கொண்டிருந்தது.

நன்றி ஊடறு.

Tuesday, 3 March 2015

"கானல் வரி" - தமிழ்நதியின் குறுநாவல்

தமிழ்நதியின் கானல் வரி என்கின்ற குறுநாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகிய இந்தக் குறுநாவல் பேசும் தளம்தான் நாவலை சுவாரஸ்யமானதாகவும் அதைப் பற்றி நாம் பேசவும் வைத்துவிடுகிறது. திருமணமாகிய ஒரு பெண் எழுத்தாளர் மாதவி, இன்னொரு எழுத்தாளர் மௌலியுடன் கணணி வழி தொடரும் நட்பு என்னும் உறவை ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலில் எழுத்துக்கள் தொடக்கி வைத்த பாதை வழி பயணிக்கும் நட்பை, காலவோட்டத்தில் காதலாக இனங்கண்டு கொள்கின்றனர் இருவரும். கணவர் வேறு நாட்டில் பணிபுரியும் நிலையிலிருக்கும் மாதவியும், மனைவி குழந்தையை தாய்நாட்டில் விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் வேலை செய்யும் மௌலியும் தங்களுக்குரிய சிநேகத்தை கணணி வழி ஆரம்பித்து அதன் வழி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தனது குடும்ப நன்மைக்காகவும், குழந்தைகளுக்காகவும் என்று காரணங்கள் சொல்லி மாதவியைப் பிரிகிறான் மௌலி. வழமை போல தனித்துவிடப்படுகிறாள் மாதவி. தங்களது உறவைத் தோற்கடித்துப் தன் வழியில் பயணிக்கும் மௌலிக்கு எழுதும் கடிதங்களாக விரிகிறது நாவல். 

 நாவலின் ஆரம்பத்தில் குடும்ப அமைப்பை மறுத்தோடும், கணவணினால் மிகவும் நேசிக்கப்படுகிற, மிக சுதந்திரமாக தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்ற மாதவியைக் காணக்கிடைக்கிறது. காலங்காலமாகவே குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கின்ற பெரும் பொறுப்புடன் வளர்க்கப்படும் பெண் என்ற பிராணி  நிலையிலிருந்து எல்லாவற்றையும் தளர்த்தி வெளியேறும் மாதவி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் கணவனுக்கு தன்னால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புது உறவைப்பற்றித் தெரியப்படுத்திவிடுகிறாள். அவளால் வெளிப்படுத்தப்படும் நேர்மை மாதவி மேல் மரியாதையைக் கொண்டுவருகிறது. ஆயுளுக்கும் என்று எழுதப்படும் காதல்களும், கல்யாணங்களும் நேசத்தில் எழுதப்படுகின்றனவோ இல்லையோ நேர்மையில் எழுதப்பட வேண்டும். எப்போது இன்னொரு உறவு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உருவாக்கப்படுகிறதோ அப்போதே அது குறித்த தெளிவை தேர்ந்துணர்ந்து, யாருக்குத் தெரியப்படுத்தாவிடினும், எம்மை பரிபூரணமாக நம்பி, காலத்துக்கும் என்று வாழத்தலைப்படும் துணைக்குத் தெரியப்படுத்திவிடுதலையும் கற்பு என்றே நான் அடையாளப்படுத்துவேன். இராமன்களை கண்டறிதல் சாத்தியப்படாத நிலையிலும், கல்லாக யுகங்கள்தோறும் காத்துக்கிடத்தல் முடியாத நிலையிலும், தனது கணவருக்குத் துரோகம் செய்துவிடக்கூடாது என்ற நிலையில் தன்னை வெளிப்படுத்தும் மனைவியாக மாதவி தன்னிலையில் நிற்கிறாள். "நானும் ராமனில்லை மாதவி, நீயும் உன்னைச்சுற்றி ஒரு நெருப்பு வளையத்தைப் போட்டுக்கொள்ளாதே" என்று மௌனமாகும் கணவன் ஆச்சரியப்படுத்துகிறான். பொருள் தேடப்புறப்ட்டுக் கணவன் சென்றுவிட, தனது உடல் மனம் சார்ந்த தேவைகளைத் தளர்த்தி, கணவன் அற்ற வீடு தரும் தனிமை, உறவுகளற்ற தனிமை, புது நாடும், புது சூழலும் தரும் தனிமை என்று எல்லாக் கொடுந்தனிமைகளுக்குள்ளும் உழழும் மாதவியை, அவள் நிலையைத் தன்னிலையோடு ஒப்பு நோக்கி அவள் ஏற்படுத்திக்கொண்ட உறவின் தேவையை புரிந்துகொள்ளும் கணவனை ஏனோ பிடித்துக்கொள்கிறது. ஆனால் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நேர்மையாகவில்லாமல், இறுதியில் மாதவியுடனான உறவுக்கும் நேர்மையில்லாமல் பிரியும் எழுத்தாளர் மௌலியை ஏனோ பிடிக்காதும் போய் விடுகிறது. எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று அறியப்படும் மக்கள் மறுத்தோடிகள் என்று தம்மை அழைத்துக்  கொள்வதும்,பின்னர் தங்களது வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற முடியாது தங்கள் மறுத்தோடும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகப் படைப்புக்களில் மட்டும் சொல்லிவிட்டுப் போகும் போக்கை மௌலியிடமும், சாதாரண மக்களாக தங்களை வரித்துக்கொண்டவர்கள் பண்பாடு சார்ந்த கேள்விகள் தங்களை அணுகும்போது வெகு நேர்மையாக அவற்றை எதிர்கொள்வதை மாதவியின் கணவனிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் போராட்டம், காலத்துக்கும் பண்பாட்டுக்கும் இடையில் எப்போதும் நடந்து கொண்டிருப்பதாகவும் படுகிறது. 

குறுநாவலின் கதை நாயகன் மௌலியை, பல இடங்களில் சமூகம் கட்டியமைத்த ஆண் என்பவனின் சாதாரண நகலாகவே பார்க்கக் கிடைக்கிறது. மாதவிக்கு வைத்திருக்கும் பிற ஆன் நண்பர்களைப் பற்றிய கண்ணோட்டத்திலும் சரி மாதவியை தனக்கு சொந்தமான ஒரு பொருள் போலக் கருதி, அவள் தான் சொல்வதைக்கேட்டுத் தன்னையே மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதிலும் சரி மௌலி தன் ஆண்மையை பறைசாற்றத் தொடங்கிவிடுகிறான். இரு குழந்தைகளுக்குத் தகப்பனாய், தன் மனைவிக்குத் துணையாய் வாய்த்திருக்கும் மௌலி நம்பிக்கைகளின் வழி கட்டப்பட்ட அந்த உறவுகளை, தனது பிம்பங்களைத் திருட்டுத்தனமாக உடைத்து, மாதவியுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் மாதவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது. மாதவியைக் கேள்வி கேட்டு, தன்னைத்தானே சிகரெட்டால் சுட்டு மாதவியை மனரீதியாக சித்திரவதைப்படுத்தும் மௌலியை நோக்கி தன் மனதுக்குள்ளாகவே, "ஏன் அப்படியிருந்தாய் மௌலி? கூப்பிடுகிற எல்லோருடனும் போய்விடுகிற ஆளா நான்?" என்று கேள்வி எழுப்புகிறாள். தன்மேலான மாதவியின் காதலில் நம்பிக்கையில்லாத மௌலியும், இவற்றையெல்லாம் தாங்கிப் போக வேண்டியநிலையில் மாதவியும் இருக்கிறாள் என்றாகும் போது, எப்படிப்பட்ட உறவு என்றாலும் பெண் என்பவள் பெண்ணாகவும், ஆண் என்பவன் ஆணாகவும் இருக்கவேண்டிய, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுவழிச் சிக்கல் எப்போதும் தொடரத்தான் செய்கிறது என்பதையும் உணரத்தான் வேண்டியிருக்கிறது. 
மேலும், இந்தக் கதையில் மௌலியின் மனைவியின் நிலை என்னவாகியிருந்தது? இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியதுடன் அவளது சுதந்திரத்தை காலாசாரமும் பண்பாடும் வழங்கும் மனைவி, தாய் என்கின்ற பட்டங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனவா? தனிமையின் நிமித்தம் மௌலியால் ஒரு உறவைக் கட்டமைத்துக் கொள்ள நேரிட்டது என்றால், அப்படி ஒரு உறவைக் கட்டமைக்கும் சுதந்திரத்தை மாதவியின் கணவன் வழங்கியதைப் போல மௌலி தன் மனைவிக்கு வழங்க முன்வந்திருப்பானா? அவளின் உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகள் குறித்து மௌலி அறிந்திருந்தானா? தனது நிலையுடன் ஒப்பிட்டு அவளும் ஒரு மனிதப்பிறவிதான் என்பதை உணரவாவது முற்பட்டானா? மீண்டும் மீண்டும் கலாசாரம் கட்டியமைத்த சமூகத்தில் பெரும்பாலும் பெண் என்பவள் குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்க வேண்டிய பிராணியாகவே கருதப்படுகிறாள் என்பதற்கு மௌலியின் மனைவியும் உதாரணமாகி விடுகிறாள். 

ஆரம்பத்தில் மறுத்தோடி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மாதவி, நாவலோட்டத்தில் இன்னொரு மாதவியாகவே மாறிக்கொண்டாள் என்பதை நாவல் காட்டுகிறது. தன் குடும்பம் விட்டு, தன் காதலின் வழி நேர்மையுடன் புறப்படும் மாதவி, மௌலி தனது குடும்பத்துக்கு செய்து கொண்டிருக்கின்ற துரோகத்தை மௌனமாக ஆதரிக்கவும் செய்தாள், அது என்ன விதத்தில் நியாயம் என்ற உளவியல் கேள்வியை இங்கு முன்வைக்க வேண்டியிருக்கிறது. தன் கணவனுக்கு நேர்மையாக இருக்க முனைந்த மாதவி, ஏன் மௌலியிடம் அதை எதிர்பார்க்கவில்லை? இறுதியில் மாதவியை விட்டு விலகும் மௌலிக்கு துரோகம் மிக இலகுவாக கைவருவது இதனாலும் இருக்கக்கூடும். ஏற்கனவே தனது குடும்பத்துக்குத் துரோகம் செய்வதை  எந்த விதக் குற்ற உணர்வுகளும் இன்றி செய்பவர்கள் தாம் கொண்ட உறவுக்கு நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அறிவீனம் என்பதை மாதவி ஏன் அறிந்திருக்கவில்லை? இப்படியே மறைவாக தொடரும் என்ற ரீதியில் தனது காதலைத் தொடர்ந்து எழுதத் தலைப்பட்டிருந்தாளா? எது எப்படியிருப்பினும் தங்கள் உறவின் பிரிவு என்பது ஏலவே மறைமுகமாக எழுதப்படிருந்ததை மாதவி அறிந்திருக்காமல் விட்டதும், அதன் பொருட்டு பாரம் சுமப்பதும் காலத்தின் கட்டாயாமாக நிகழ்ந்தேறுகிறது. 

தனது முப்பதாவது வயதில் தற்கொலை செய்துகொண்டு வாதைகளிடமிருந்தும், வார்த்தைகளிடமிருந்தும் தன் குழந்தைகளிடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட கவிஞை, படைப்பாளி சில்வியா பிளாத் சிறு வயதிலிருந்தே மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவரது மன அழுத்தம் இன்னும் இன்னும் மேலிட அவரது காதல் கணவன் இன்னொரு உறவைத் தேடி அவரையும், அவரது இரு குழந்தைகளையும் கைவிட்டு சென்றதும் முக்கியாமான காரணம் என்கிறது காலம். அவரும் ஒரு படைப்பாளி என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. "Dying is an art, Like everything else. I do it exceptionally well. I do it so it feels like hell. I do it so it feels real. I guess you could say I've a call." - மரணிப்பது எல்லாவற்றையும் போல ஒரு கலை. அதை நான் மிகவும் திறம்பட செய்வேன். அது நரகமாக உணரக்கூடியது போலவும், உண்மையானதாக உணரக்கூடியதாகவும் அதை நான் செய்துகொள்வேன். எனக்கு ஒரு அழைப்பு வந்திருப்பதாக நீங்கள் அப்போது சொல்லக்கூடும் என்று நான் எண்ணிக்கொள்கிறேன். என்றாள் அவள். தன்னை எழுத்துக்களில் வடிக்கக்கூடிய மிகச்சிறந்த கவிஞை. படைப்பாளி தனக்கு செய்யப்பட்ட துரோகத்தில் எப்படி இன்னும் மீள முடியாத அளவுக்கு சிதைந்து போகிறாள் என்பதற்கு சில்வியா பிளாத் ஒரு உதாரணம். 

கானல் வரி இதன் மறுதலையாகி நடந்தேறி விடுகிறது. துரோகங்களை இலகுவாக செய்துவிட்டு, மீண்டும் பண்பாட்டைக் காக்கும் பொருட்டு தன் மனைவியுடன் குழந்தைகளுடன் இணைந்து கொள்கிறான் மௌலி. துரோகங்கள் யார் செய்தாலும் தாங்க முடியாததாகவே இருக்கும் போது மனைவியுடன் இணைந்து அவளைக் காப்பாற்ற முனைந்த மௌலி, தன்னை நம்பிப் புறப்பட்ட மாதவியைக் கைவிட்டதும், என்ன செய்தாலும் ஆண் என்பவன் "சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவி" வந்தாலும் அவன் ஆணாகி விடுகிறான். என்னதான் மறுத்தோடிகளாகப் புறப்பட்டாலும் பெண்கள் இறுதியில் பண்பாடுகளின் அவமான சின்னமாகிவிடுகிறார்கள்.  பண்பாட்டையும், கலாசாரத்தையும் காரணம் காட்டி இன்னொரு கோவலன் ஆகிவிடுகிறான் மௌலி. ஆனால் அவன் பொருட்டு புறப்பட்ட மாதவி காவியம் கண்ட இன்னொரு மாதவியாகவே தொலைந்து போகிறாள்.  


Thursday, 27 February 2014

நெடி

கையில் மந்திரக் கோலேதும் இல்லாது
மரணத்தின் நெடியைத் தேடியபடி
ஈரத்துக்குள் தூங்கும் நகரில் பயணித்த என்னை
ஓநாய்களும் துருவக்கரடிகளும்
கண்டங்கள் தாண்டி வழிநடத்தின
இலை துளிர்க்க சிலிர்த்துப் பூக்கும் மரத்தில்
காதலின் வாசமடி என்ற போது கிளுக்கிச் சிரித்து
இருக்கலாம் என்றவள் தான்
உடல் இளக மனதுள் கசியும் மூன்றாஞ் சாமத்தின் மௌனத்துக்கு
குளிரின் பச்சை மணமென்று நான் சொன்னபோது
மௌனித்திருந்தாள்
நிக்கோட்டின் வழியும் முத்தத்தின் வாசமென்று
பின்னதான இரவில் அவள் வாதாடிய நினைவு வந்தபோது
நான் துருவங்களைத் தாண்டியிருந்தேன்
மொட்டை மரங்களையும்
வெள்ளை மலைகளையும் விலத்திக் கடந்தபோது
தாழப்பதிந்து நதியாடிய கிளையிலிருந்து
பனிக்குள் உதிர்ந்து அழுகிய பூவின் சக்கு மணத்தோடு
உறைந்த நதியின் ஆழத்தில் சலசலப்பற்று கிடந்தது
தனிமை;
அந்தப்போதில்
சூரியன் குளிருக்குப் பயந்து
தயங்கித் தயங்கி மேலெழப் பார்த்தபின்
பனி  விலத்திக் கரைதட்டிய மீனுக்கு சாவின் நெடி
என்  உள்ளங்கை வியர்வையின் பிசுபிசுப்பாய் இருந்திருக்கக்கூடும்

- நன்றி உரையாடல் சஞ்சிகை 

Sunday, 2 February 2014

ஒரேகதைகள்..!

கிடுகு பதியக்கட்டிய தாழ்வாரத்தை
ஒளிந்து கடந்தது  வெயில்
கோழிக்குப் போட்ட குறுனிகளை
கொத்திக் கொண்டு திரிந்தது புலுனி
முந்தநாள் இரவில் போதை கிளர்த்தி
அடித்துப் பெய்த நிலவின் தடயங்கள் அழிந்து
வெறித்துக்  கிடந்தது முற்றம்
வெப்பமிலையும் மாவிலையும் உதிர்த்து
அறம் பாடி இழைந்தது காற்று
துமிக்காத மழையை திட்டாமல் திட்டி
உப்புமிளகாய்ச் சுளகுகளைப் பரப்பி வைத்தபடியிருந்தாள் கிழவி
வெடித்துக் கிளம்பும் அழுகையை
சுவரும் அறியாமல் அடக்கி
மண்சுவருடைத்து சுண்ணாம்பு சாப்பிடவாரம்பித்தாள்
பதின்மச்சிறுமி;

பாரிஸ் நகரத்தெருக்களில்
பொம்மையொன்றை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவனை
நான் கண்டேன்
பின்னொரு நாளில் புகையிரதநிலையத்திலும்
இன்னொரு பனிப்புயலிலும் அவன் நிற்கப் பார்த்தேன்
நூலிழையில் விரல் கோர்த்து அவன் அசைத்தபோது
பொம்மையின் உடல் முழுதும்
கொடிகள் முளைத்தன
பூமியோடு வேரோடிப் பிரிந்தோடிய கிளைகள்தோறும்
பொம்மையின் நூலெல்லாம் பின்னிப்  பிணைந்தது
விரல்கள்தோறும் நூல்கண்டுகளுடன்
அவன் நகர்ந்தபடியே இருந்தான்
கொடிகள் செழித்து வளர்வதாய் அவன் நம்பிய பொழுதில்
வேரோடு கிளர்ந்தது கொடி
நூல் இற்றுத் தெறிக்க
பொம்மையின் வாய் உமிழ்ந்த நீரில் முகம் நனைய நகர்ந்தவனை
மீண்டும் அதே தெருக்களில் இன்னொரு பொம்மையுடன் கண்டேன்
போதை தலைக்கேறி மயங்கிக் கிளர்ந்த பொழுதில்
ரஷ்யத் தெருக்களில் திரிந்த பொம்மலாட்டக்காரன் பற்றி
வேறொரு மொழியில் பாடிச்சரிந்தாள்
இன்னொருத்தி;

- உரையாடல் சஞ்சிகை - ஜனவரி 2014

Friday, 23 August 2013

ஆகக் கடவ..;



நடுச்சாமத் திடுக்கிடலில்
அவரை கண்டேன்
அசுமாத்தங்களின்றி போர்வைக்குள் நுழைந்தவரை
யாரென்று கேட்பதுடன் அயர்ந்தேன்
ஆக
உனக்குக் கடவுளைத் தெரியாதென்றது அசரீரி
மயிர்க்கால்கள் கூச்செறிய துடித்தெழுந்து
அவர் காலடியில் அமர்ந்து கொண்டேன்

சாமங்கள் தாண்டிய குளிர்
கடவுளுக்கப்பால் கிடந்தது 

தூக்கமேயில்லை என்றேன்
கனவுகள் அந்தரித்துத் திரிகின்றன என்றும் சொல்லி
அவர் நாமங்களை உச்சரித்துச் சாய்ந்தேன்

----------

வெக்கை முகிழ்த்த பகல்

பெருமழைக்கான காத்திருப்பில்
பூளை கசியும் கண்மூடி
தனித்திருந்தாள் கிழவி
காற்றில் கைகள் துளாவி
இவளைப் பிடிக்க வந்தாள்

கடவுளே
முற்றமெல்லாம் மாம்பழங்கள்
வெம்பிப் பழுத்தவற்றை
தின்று செரித்தது மாடு

கடவுளே
கோழிப்பீ கரைந்தோடும் மண்ணை
நான் வெறுத்தேன்

கடவுளே
போறணைக்குள் தூங்கிக் கிடந்த போயிலை மணம்
என் அம்மாவிலும் வீசியது
ஈரப் பொச்சு மட்டைகளின்
தீய்ந்த மணம் காற்றில்

கடவுளே
பனையளவு தாப்பம் எங்கள் கிணறு
அதுக்குள் நிலவு விழுந்து கிடந்தது

கடவுளே
என் கொலுசை
பாம்புப் புத்துக்குள் ஒளித்து வைத்தேன்

கடவுளே
இப்படி ஒரு சாமத்தில்
நான் கடல்களை நீந்தித் தாண்டினேன்

கடவுளே
நேற்று என் கனவுகளை
மழைக்குக் கடன் கொடுத்தேன்

இன்றைக்கானவற்றை
செம்பாட்டு மண்ணுக்கு

நாளைக்கானவற்றை
வரப்பு நிறையும் மிளகாய்களுக்கு

----------

கால் உதறி விழிக்கையிலும்
கடவுள் அங்கிருந்தார்

கொடுத்தனுப்ப ஒன்றுமில்லை

குழந்தையின் எச்சில் முத்தமும்
சாம இருட்டின் ஒரு கைப்பிடியுமாய்
அவரை அனுப்பலாயிற்று

கடவுளே
இந்த அறை உன்னுடையதாயிருந்தது
இப்போது என் போர்வையும்
உனதேயாகக் கடவ

- நன்றி பெட்னா இலக்கிய மலர்.