Sunday 2 February 2014

ஒரேகதைகள்..!

கிடுகு பதியக்கட்டிய தாழ்வாரத்தை
ஒளிந்து கடந்தது  வெயில்
கோழிக்குப் போட்ட குறுனிகளை
கொத்திக் கொண்டு திரிந்தது புலுனி
முந்தநாள் இரவில் போதை கிளர்த்தி
அடித்துப் பெய்த நிலவின் தடயங்கள் அழிந்து
வெறித்துக்  கிடந்தது முற்றம்
வெப்பமிலையும் மாவிலையும் உதிர்த்து
அறம் பாடி இழைந்தது காற்று
துமிக்காத மழையை திட்டாமல் திட்டி
உப்புமிளகாய்ச் சுளகுகளைப் பரப்பி வைத்தபடியிருந்தாள் கிழவி
வெடித்துக் கிளம்பும் அழுகையை
சுவரும் அறியாமல் அடக்கி
மண்சுவருடைத்து சுண்ணாம்பு சாப்பிடவாரம்பித்தாள்
பதின்மச்சிறுமி;

பாரிஸ் நகரத்தெருக்களில்
பொம்மையொன்றை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவனை
நான் கண்டேன்
பின்னொரு நாளில் புகையிரதநிலையத்திலும்
இன்னொரு பனிப்புயலிலும் அவன் நிற்கப் பார்த்தேன்
நூலிழையில் விரல் கோர்த்து அவன் அசைத்தபோது
பொம்மையின் உடல் முழுதும்
கொடிகள் முளைத்தன
பூமியோடு வேரோடிப் பிரிந்தோடிய கிளைகள்தோறும்
பொம்மையின் நூலெல்லாம் பின்னிப்  பிணைந்தது
விரல்கள்தோறும் நூல்கண்டுகளுடன்
அவன் நகர்ந்தபடியே இருந்தான்
கொடிகள் செழித்து வளர்வதாய் அவன் நம்பிய பொழுதில்
வேரோடு கிளர்ந்தது கொடி
நூல் இற்றுத் தெறிக்க
பொம்மையின் வாய் உமிழ்ந்த நீரில் முகம் நனைய நகர்ந்தவனை
மீண்டும் அதே தெருக்களில் இன்னொரு பொம்மையுடன் கண்டேன்
போதை தலைக்கேறி மயங்கிக் கிளர்ந்த பொழுதில்
ரஷ்யத் தெருக்களில் திரிந்த பொம்மலாட்டக்காரன் பற்றி
வேறொரு மொழியில் பாடிச்சரிந்தாள்
இன்னொருத்தி;

- உரையாடல் சஞ்சிகை - ஜனவரி 2014

No comments:

Post a Comment