Thursday 27 February 2014

நெடி

கையில் மந்திரக் கோலேதும் இல்லாது
மரணத்தின் நெடியைத் தேடியபடி
ஈரத்துக்குள் தூங்கும் நகரில் பயணித்த என்னை
ஓநாய்களும் துருவக்கரடிகளும்
கண்டங்கள் தாண்டி வழிநடத்தின
இலை துளிர்க்க சிலிர்த்துப் பூக்கும் மரத்தில்
காதலின் வாசமடி என்ற போது கிளுக்கிச் சிரித்து
இருக்கலாம் என்றவள் தான்
உடல் இளக மனதுள் கசியும் மூன்றாஞ் சாமத்தின் மௌனத்துக்கு
குளிரின் பச்சை மணமென்று நான் சொன்னபோது
மௌனித்திருந்தாள்
நிக்கோட்டின் வழியும் முத்தத்தின் வாசமென்று
பின்னதான இரவில் அவள் வாதாடிய நினைவு வந்தபோது
நான் துருவங்களைத் தாண்டியிருந்தேன்
மொட்டை மரங்களையும்
வெள்ளை மலைகளையும் விலத்திக் கடந்தபோது
தாழப்பதிந்து நதியாடிய கிளையிலிருந்து
பனிக்குள் உதிர்ந்து அழுகிய பூவின் சக்கு மணத்தோடு
உறைந்த நதியின் ஆழத்தில் சலசலப்பற்று கிடந்தது
தனிமை;
அந்தப்போதில்
சூரியன் குளிருக்குப் பயந்து
தயங்கித் தயங்கி மேலெழப் பார்த்தபின்
பனி  விலத்திக் கரைதட்டிய மீனுக்கு சாவின் நெடி
என்  உள்ளங்கை வியர்வையின் பிசுபிசுப்பாய் இருந்திருக்கக்கூடும்

- நன்றி உரையாடல் சஞ்சிகை 

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

    வலைச்சர தள இணைப்பு : மகளிர் மட்டும்

    ReplyDelete