Saturday 4 June 2011

நீயும், இந்த இளவேனிலும்..!!

நிறைந்த நிலவு
வானத்தில்;
குழந்தையின் உள்ளங்கையின் மென்மை
காற்றெங்கும்;
அதிராமல் உதிர்கின்றன
வார்த்தைகள்;

இந்த
இளவேனில் ஏன் நகர்வதாயில்லை..
மழை நனைத்த பூமி
குளிர்ந்து கிடக்கிறது
பார்;
என் மனதைப் போல;

என் சொற்கள் கொண்ட அர்த்தங்களை
நானே அழிக்கிறேன்;
பேசாமல் இருக்கின்றன
உதடுகள்..
எங்கு போயிருந்தாய்
எப்போது
எப்படி
சரி, இப்போது எப்படி இருக்கிறாய்?
பிரிவின் போது கூட நடந்த
நினைவுகள் சொல்கின்றன
பதில்களை;
பொறுமையாக வளர்கிறது
மௌனம்;

எது நடப்பினும்
கிழித்துக் கொண்டு
திரும்பிவிடுகிறது
நட்பு மனதுள்;

இந்த
இளவேனில் ஏன் தானோ நகர்வதாயில்லை;
காரணங்களை நிரப்பமுடிகிறது
நாட்குறிப்பின்
இன்றைக்கான தாளில்..

2 comments:

  1. //அதிராமல் உதிர்கின்றன
    வார்த்தைகள்//
    கவிதை முழுதும்..!

    ReplyDelete
  2. இளவேனில் ஏன் தானோ நகர்வதாயில்லை;
    காரணங்களை நிரப்பமுடிகிறது
    நாட்குறிப்பின்
    இன்றைக்கான தாளில்..//
    இளவேனிலாய்
    இனிக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete