Saturday 7 November 2009

நித்திரை என்பதான பொய்

விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்

தேடிப் பறந்த மனதோ - தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது

நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்

தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்

இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் - ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்

1 comment:

  1. ஒரே வரியில் சொல்வதென்றால் "அட்டகாசம்"

    ReplyDelete