Saturday 3 August 2013

தனித்த வைரவர்..!


தனித்த வைரவர்..!

1.


பெரிய குளம் கரை புரண்டு
இருட்டு ஒதுங்கும் மரத்தடியில் 
வாளாதிருக்கிறார் வைரவர் 
துடித்தடங்கும் ஆட்டின் கழுத்தடியில் வழியும் 
இரத்தத்தின் செஞ்சூடு இரவில் விரவ 
மல்லாந்து வீழ்கிறது உடலம்
நான் இறைஞ்சி மண்டாடுகிறேன்
மடை புரண்டோடுகிறது சோறும் கறியும்
காலம் கரைந்து மூழ்க
முக்கித் தவிக்கின்றன நினைவுகள்
உணர்வுகள் விரயமாகி வீழ
நிர்வாணித்து நிற்கும் இந்த சொற்கள்
வைரவரின் நடுச்சாம உலாவலுடன்
புலம் பெயர்ந்தன 


2.

காரணங்கள் சொல்லி அலுத்த பொழுதில்
சூரியன் கைவிட்ட இப்பெருவெளி நிறைத்து 
சொற்களைப் பெய்கிறது மேகம்
போதை நிறைந்த கண்களில் 
நீர்த்த கனவுகளின் கிறக்கம் தீர்ந்தபாடில்லை 
வாதை சொல்லாக் கவிதை பாழ் 
மொழி பாழ் என்றேன் 
இல்லை நீயே அழிந்தாய் 
என்று ஆவேசமாடி புழுங்கும் மனதை 
கூறு போட்டு பரிமாறியதைக் குறித்தும் 
சலனமில் தாமரை குளத்தைச் சுட்டி 
தியான மந்திரங்களை உருப்போட்டதையும்
சொல்லிய பின் 
குளம் நிறையக் குவிந்த பறவைகள் 
இரத்தஞ் சொட்டும் அலகுகளும்
நீள் கால்களும் 
கொண்டு பறந்தன
கனவுகளில் துருப்பிடித்த சூலமேந்தி அலைகிறார்
தனித்த வைரவர்

- நன்றி எழுநா..

No comments:

Post a Comment